டெங்கு காய்ச்சலால் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் அருகே முடினாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் சிவானி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இளைய மகள் நிரஞ்சனா அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி சிவானி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பயனின்றி சிறுநீரகம், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து நேற்று பரிதாபமாக உயிரிழ்ந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.