இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்ள சென்ற கணவன், மனைவி, மகள் என 3 பேரும் விபத்தில் பலியான சோகம்!
Dinamaalai March 17, 2025 02:48 PM

விழுப்புரம் மாவட்டத்தில், தனது சகோதரரின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்வதற்காக மனைவியையும், மகளையும் தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த நிலையில், அரசு பேருந்து மோதி 3 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ராஜாம்புளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (50). இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பச்சையம்மாள் (46), மகள் கோபிகா (18), மகன் குணகேகர் (21).

இந்நிலையில் துரைக்கண்ணுவின் அண்ணன் நந்தகோபால் உயிரிழந்த செய்திக் கேட்டு, அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க துரைக்கண்ணு, குணசேகர் ஆகியோர் பைக்கில் நேற்று சென்னையில் இருந்து செஞ்சி புறப்பட்டு சென்றனர். ஒரு பைக்கில் துரைக்கண்ணு அவரது மனைவி பச்சையம்மாளும், மகள் கோபிகாவும், குணசேகர் மற்றொரு பைக்கிலுமாக கிளம்பி சென்றுக் கொண்டிருந்தனர்.

இவர்களது பைக் செஞ்சி திண்டிவனம் சாலையில் வல்லம் தொண்டியாற்று பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இதில் பைக்கில் வந்த 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த செஞ்சி போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த துரைக்கண்ணுவின் மகள் கோபிகா வயது (18) பிஎஸ்சி முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். விபத்து குறித்து குணசேகர் செஞ்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.