முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தபேந்திர பிரதான் 84 வயதில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இன்ற காலமானார். இவரது இறுதிச்சடங்கு புவனேஸ்வரில் உள்ள புரி ஸ்வர்கத்வாரில் நடைபெற்றது.
தேபேந்திர பிரதான் ஒடிசா அரசியலின் முக்கியப் பிரமுகரும், மூன்று முறை பாஜக மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர். ஒடிசாவில் பாஜகவின் அடித்தளத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். பாஜகவின் தல்சர் மண்டல் தலைவராக (1980-1983) தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், 1998-இல் ஒடிஸாவின் தியோகர் தொகுதியிலிருந்து 12-வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்களவையில் அறிமுகமான பிறகு வாஜ்பாய் அரசில் போக்குவரத்துக்கான இணையமைச்சராக அவருக்கு ஒதுக்கப்பட்டது. 1999 தேர்தலில் மக்களவைத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்ட அவர், 1999 முதல் 2001 வரை போக்குவரத்து மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
2001-ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது; மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதானின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான காலத்தை கடக்க அவருக்கு வலிமை கிடைக்கட்டும். என கூறியுள்ளார்.