திருவண்ணாமலையில் பரபரப்பு... நடுரோட்டில் இளைஞர் வெட்டி படுகொலை!
Dinamaalai March 17, 2025 02:48 PM

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஜாமீனில் வந்த பைனான்ஸ் ஊழியர் விக்னேஷ், நடுரோட்டில் சரமாரி யாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலைத் தொடர்பான வழக்கில் 3 பேர் போலீசில் சரணடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், ஆரணிபாளையம் சாந்தா தெருவைச் சேர்ந்தவர் கரிமா என்கிற விக்னேஷ் (26). ஆரணியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ள நிலையில், அவரது மனைவி தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

விக்னேசும், ஆரணி பாளையம் தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் நண்பர்கள். மணிகண்டன் மீது கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கில் போலீசார் மணிகண்டனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த மணிகண்டன், போலீசில் தன்னைக் காட்டிக் கொடுத்தது விக்னேஷ் தான் என நினைத்து தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது விக்னேஷுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4-11-2021 அன்று மணிகண்டன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் ஜாமீனில் வந்த விக்னேஷுக்கும், மணிகண்டனின் ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

இம்மாதம் 27ம் தேதி மணிகண்டன் கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வர உள்ள நிலையில், மணிகண்டனின் ஆதரவாளர்களால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்த விக்னேஷ், மணிகண்டன் ஆதரவாளர்களுடன் சமரசம் பேச திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் மணிகண்டனின் ஆதரவாளர்கள் 5 பேர் மது அருந்திக் கொண்டிருப்பதை அறிந்து, விக்னேஷ் தனது பைக்கில் அங்கு சென்று அவர்களிடம் சமரசம் பேசியுள்ளார். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. விக்னேஷ் அவர்களிடம் இருந்து தப்ப முயன்றார். ஆனால் அவர்கள் சுற்றிவளைத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் அதே இடத்தில் இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதனிடையே இன்று காலை விக்னேஷ் கொலை தொடர்பாக மணிகண்டனின் ஆதரவாளர்கள் எனக்கூறப்படும் தனபால் (25), தாமோதரன் (24), கமல் (34) ஆகிய 3 பேர் கண்ணமங்கலம் போலீசில் சரணடைந்தனர். இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.