கூலி படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 171வது படமாக கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹைதராபாத், பாங்காக் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். செளபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாகி வருகிறது.
கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த எதிர்பார்ப்புக்கிடையே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் படத்தின் மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. கூலி திரைப்படம் ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.