நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, தினமும் ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் சம்மன் அனுப்பப்பட்டு வருவதாகவும், இந்த வழக்குகளை ஒரே வழக்காக மற்ற வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். அப்போது, சீமான் தரப்பில் வழக்கறிஞர் எஸ். சங்கர் ஆஜராகி வைத்த வாதத்தில்,
* சீமான் ஒரே இடத்தில் {வடலூரில்} பேசியுள்ளார். ஆனால் தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* பெரியார் பொதுக்கூட்டங்களில் பேசியதன் அடிப்படையில் மட்டுமே அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
* அனைத்து வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.
ஆனால், நீதிபதி இதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில்,
* மனுவில் எந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாக குறிப்பிடவில்லை.
* வழக்கு எண்கள், புகார்தாரர்களின் விவரங்கள் அடங்கவில்லை.
* சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களைக் கூட எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை.
என்று குறைபாடுகளை உணர்த்திய நீதிபதி, இந்த மனுவை திரும்பப் பெற்றுவிட்டு, முழு விவரங்களுடன் மீண்டும் மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.