சுனிதா வில்லியம்ஸ்க்கு இபிஎஸ் வாழ்த்து!
Dinamaalai March 19, 2025 03:48 PM

சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்கள் கழித்து இன்று அதிகாலை பூமிக்கு திரும்பியுள்ளார்.  நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், வில்மோா்  இருவரையும்  பூமிக்கு திரும்ப அழைத்து வர  ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக புதன்கிழமை அமெரிக்காவின் ஃபுளோரிடா அருகே கடல் பகுதியில் பாராசூட்கள் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(மார்ச் 18) காலை 10.30 மணியளவில் பூமிக்கு புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 17 மணி நேர பயணத்துக்குப்பிறகு  சுனிதா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி புதன்கிழமை  அதிகாலை 3.30 மணிக்கு  பூமிக்கு  பாதுகாப்பாக தரையிறங்கியது.


அதனைத்தொடர்ந்து, மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ள கப்பல், கடலில் பாதுகாப்பாக இறங்கியுள்ள டிராகன் விண்கலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது.இந்நிலையில், ஒவ்வொரு வீரர்களாக விண்கலனிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு கப்பலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அடுத்த 30 நிமிடங்களில் அதிலிருந்து வீரர்கள் வெளியே அழைத்து வரும் பணி நிறைவடைந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.


இந்நிலையில், மனிதர்களால் விண்வெளியில் கடுஞ்சவாலான சூழலில் வாழ முடியும் என்பதை சாதித்துக் காட்டி பூமிக்கு திரும்பியள்ள சுனிதா வில்லியம்ஸ்  ஆகியோருக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சவால்களை எதிர்கொண்டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையாக, சவால்களை எதிர்கொண்டு திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து திரும்பிய முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்று. அவரது பயணம் விண்வெளி ஆய்வு மட்டுமல்ல, பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது. தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவமாக சுனிதா வில்லியம்ஸ் திகழ்கிறார் என பதிவிட்டுள்ளார்.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.