2025-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுதினம் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில், ஏப்ரல் 06-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 3.30-க்கு நடைபெறவுள்ளது.
அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை. இதனால் இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். அன்றைய தினம் ராம நவமி கொண்டாடப்படவுள்ளது. ராம நவமி தினத்தில் கொல்கத்தாவில் பாஜக பேரணி நடத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன் காரணமாக கொல்கத்தா முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதே தினத்தில் போட்டியும் நடைபெறவுள்ளது. இதனால், பாதுகாப்பிற்கு போலீஸ் அதிகளவில் குவிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் 06-ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியை மற்றொரு தேதிக்கு மாற்றி வைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.