இனி பவுலர்களுக்கு கொண்டாட்டம் தான்..! வருகிறது ஐபிஎல்லில் 2 புதிய விதி..!
Top Tamil News March 21, 2025 10:48 AM

ஐபிஎல் போட்டிகள் மே 18ம் தேதி வரை 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து மே 20ம் தேதி குவாலிபயர் முதல் போட்டி நடக்கிறது. மே 21ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடக்கிறது. மே 23ம் தேதி குவாலிபயர் 2ம் போட்டி நடக்கிறது. மே 25ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் 2 புதிய விதிகள் அமல்படுத்தப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது பவுலர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிட உள்ளது. கிரிக்கெட்டில் பந்தை ஸ்விங் செய்வதற்காக பவுலர்க்ள் பந்தில் உமிழ்நீரை தேய்த்து அதை கிரிப் செய்து வந்தனர். கொரொனா காலக்கட்டத்தில் பந்தில் வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்த ஐசிசி தடைவிதித்தது. கொரோனாவுக்கு பிறகு இந்த தடை நிரந்தரமாக்கப்பட்டது. அதே வேளையில் பல்வேறு பவுலர்களின் கோரிக்கையை ஏற்று ஐபிஎல்லில் வீரர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த பிசிசிஐ அனுமதி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் ஐபிஎல்லில் மாலை நேர போட்டிகளின் இரண்டாவது இன்னிங்ஸில் 2வது புதிய பந்து விதியை அறிமுகப்படுத்த ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. அதாவது ஐபிஎல்லில் இரண்டாவது பவுலிங் செய்யும் அணிகள் பனியின் தாக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பனியின் காரணமாக பவுலர்கள் பந்தை கிரிப் செய்ய முடியாததால் அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிரது. இதனால் ரன்கள் அதிகமாக செல்கிறது.

இதை தவிர்க்கும் வகையில் 2 புதிய பந்து விதி கொண்டு வரப்படுகிறது. 'இரண்டாவது பந்து' விதி ஒரு போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே பரிசீலிக்கப்படும். 11வது ஓவருக்குப் பிறகு. பந்தை மாற்ற வேண்டுமா என்பது குறித்து களத்தில் உள்ள நடுவர்கள் இறுதி முடிவை எடுப்பார்கள். மைதானத்தில் அதிகப்படியான பனியின் தாக்கம் மற்றும் உறுதியான அறிகுறிகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். அதே வேளையில் பிற்பகல் போட்டிகளில் (மாலை 3.30 மணி போட்டி) இரண்டாவது பந்து விதி இடம்பெறாது, ஏனெனில் பகல்நேர ஆட்டங்களில் பனி ஒரு பிரச்சனையாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.