மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பைக் மீது லாரி மோதி கோர விபத்திற்குள்ளானதில், 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கவரப்பட்டு வீரன் கோயில்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(21). அதே போன்று மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை சேர்ந்தவர் புவனேஷ்(23).
கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த நண்பர்களான இந்த இரு மாணவர்களும், பைக்கில் ஒன்றாக தங்களது கல்லூரிக்குச் சென்றுக் கொண்டிருந்தனர்.
இவர்கள் ஒரே பைக்கில், தேசிய நெடுஞ்சாலையில் அரசு கலைக்கல்லூரி அருகே சென்றுக் கொண்டிருந்த போது எதிரே மயிலாடுதுறையில் ஜல்லி இறக்கிவிட்டு புதுச்சேரி நோக்கி சென்றுக் கொண்டிருந்த டாரஸ் லாரி, கண் இமைக்கும் நேரத்தில் இவர்களது பைக் மீது மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு, துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.