நடப்பாண்டுக்கான 18வது சீசன் ஐபிஎல் தொடர்போட்டிகள் இன்று மார்ச் 22 ம் தேதி சனிக்கிழமை மாலை தொடங்கப்பட உள்ளது. இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி என்பதால் பிரம்மாண்ட தொடக்கவிழாவுடன் தொடங்க உள்ளது. தொடக்கவிழாவில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தவிருக்கிறார்.
இந்நிலையில் திடீரென ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் லேசான மழைபெய்து வருகிறது. அது மட்டுமின்றி வியாழன் முதல் ஞாயிறு வரை தெற்கு வங்காளத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஐபிஎல் 2025ன் தொடக்க நாளான மார்ச் 22 அன்று ஆரஞ்சு எச்சரிக்கையும், ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் இன்று மழை பெய்தால் போட்டி நடைபெறும் வாய்ப்பு சந்தேகம் தான் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொல்கத்தாவில் சனிக்கிழமை 74% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 97% வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் மழைக்கான வாய்ப்பு 90% ஆக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை பெய்யவில்லை என்றால் போட்டி திட்டமிட்டபடி நடத்தப்படும். அப்படி மழை பெய்தது என்றால் தொடக்கவிழா என அனைத்தும் ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது. மேலும், ஒருவேளை மழையால் நாளை போட்டி முழுவதும் ரத்தானால், இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.