பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?
WEBDUNIA TAMIL March 28, 2025 12:48 PM

கடலூரில் நகரப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி காயமடைந்தார். இந்த விபத்து ஓட்டுனரின் அலட்சியத்தால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடலூர் வன்னியார்பாளையத்தை சேர்ந்த இளம்பரிதியின் மகள் 19 வயது தார்ஷினிதேவி என்ற கல்லூரி மாணவி தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி முதல் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று பிற்பகலில், அவர் தனது கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நகரப் பேருந்தில் ஏறி கடலூர் பேருந்து நிலையத்துக்கு பயணித்தார். அந்த பேருந்தில் ஏராளமான மாணவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

பேருந்து கடலூர் தீயணைப்பு நிலையம் அருகே நிற்கும்போது, தார்ஷினிதேவி இறங்க முயன்றார். அப்போது, ஓட்டுநர் எதிர்பாராத விதமாக பேருந்தை திடீரென இயக்கியதால், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தேவனாம்பட்டினம் போலீஸார் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.