இந்த ஆண்டிலிருந்து, பட்டயக் கணக்காளர் (CA) இறுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறைகள் நடத்தப்படும் என இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) வியாழக்கிழமை அறிவித்தது.
முதன்மை மற்றும் இடைநிலைத் தேர்வுகளை ஆண்டுக்கு மூன்றுமுறை நடத்த ஐசிஏஐ கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, இறுதி தேர்வும் ஆண்டுக்கு மூன்றுமுறை நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ICAI வெளியிட்ட அறிக்கையில், உலகளாவிய தரத்திற்க்கு ஏற்ப மாற்றங்களை செய்யவும், தேர்வர்கள் அதிக வாய்ப்புகளை பெறவும் இந்த முக்கியமான தீர்மானம் 26-வது ஐசிஏஐ கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிலிருந்து, தேர்வுகள் ஜனவரி, மே, செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். இதன்மூலம், தேர்வர்கள் தேர்ச்சி பெற அதிக வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
அதேபோல், CA தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படும் தகவல் அமைப்புத் தணிக்கை (ISA) படிப்பின் தேர்வுகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஜூன், டிசம்பர் மாதங்களில் மட்டும் நடத்தப்பட்ட இந்த தேர்வுகள் இனி பிப்ரவரி, ஜூன், அக்டோபர் ஆகிய மாதங்களில் மூன்று முறையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva