நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!
Webdunia Tamil March 29, 2025 06:48 PM

நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கும் நிலையில் நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?

செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி

அக் 2021- அனு, கீர்த்திவாசன்

நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்

ஜூன் 2022- தனுஷ்

ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி

ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ

செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி

மார்ச் 2023- சந்துரு

ஏப்ரல் 2023- நிஷா

ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்

டிசம்பர் 2023- ஆகாஷ்

அக்டோபர் 2024- புனிதா

மார்ச் 2025-இந்து, தர்ஷினி

இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் திரு. முக ஸ்டாலின்

சொல்லப்போகும் பதில் என்ன? உதயநிதியின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?

தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?

மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் திரு.

முக ஸ்டாலின்!

மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.