காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை அருகே மணிமங்கலம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் தமிழரசன். இவர், அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, மணிமங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6- ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் தமிழரசன் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் மதியம் பள்ளிக்கு செல்வதற்காக பாட்டி வீட்டில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து 'ஹீட்டர்' போட்டுள்ளார்.
இதையடுத்து தமிழரசன் சிறிது நேரம் கழித்து தண்ணீர் சூடாகி விட்டதா? என்பதை அறிய, பாத்திரத்துக்குள் கை வைத்து பார்த்துள்ளார். அப்போது தமிழரசன் மின்சாரம் தாக்கி பலியானார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி இந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.