பொதுவாக விலங்குகளில் நாய்கள் நன்றியும் விசுவாசமும் மிகுந்தவை. இவை தனது உரிமையாளருக்காக எத்தனை எதிர்ப்பையும் சமாளிக்கும். எஜமானின் வீட்டினருக்கு உயிருக்கு ஆபத்து என்றால் தனது உயிரை துச்சமாக்கி அவர்களை காக்க தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதை பல நிகழ்வுகள் நமக்கு எடுத்து காட்டுகின்றன.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் பண்ணை வீட்டில் வசித்து வருபவர் ஷமந்த் கவுடா . இவரது பண்ணை வீட்டில் உள்ள கோழிப்பண்ணைக்குள் 12 அடி நீள ராஜநாகம் ஒன்று நுழைந்துவிட்டது. அந்த இடத்தில் ஷமந்த் கவுடாவின் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த வளர்ப்பு நாய் ‘பீமா’. குழந்தைக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக ராஜநாகத்துடன் சுமார் 40 நிமிடங்கள் கடும் போராட்டம் நடத்தியது.
அந்த சண்டையில் பீமா ராஜநாகத்தை கடித்து 10 துண்டுகளாக குதறி கொன்றுவிட்டது. அதே நேரத்தில் பாம்பின் விஷம் பீமாவிற்கு ஏறியதால் பீமா நாய் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. பீமா இதற்குமுன் இந்த பண்ணையில் நுழைந்த 15 விஷ பாம்புகளை இதேபோன்று தைரியத்துடன் எதிர்கொண்டு கொன்றிருப்பதாக அதன் உரிமையாளர் ஷமந்த் கவுடா பெருமையாக தெரிவித்தார். மேலும் உரிமையாளர் குடும்பத்தின் உயிரை காக்க வளர்ப்பு நாய் உயிரை விட்டது பெரும் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.