இந்தியாவை சேர்ந்த ஆலிஸ் ஜான் (88) என்பவர் கனடாவில் உள்ள தனது மகன் ஜோசப் கிறிஸ்டியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதற்கு”சூப்பர் விசா”அடிப்படையில் 6 மாதங்களுக்கு கடந்த ஜனவரி 2024 இல் சென்றுள்ளார். ஆனால் கனடா சென்ற சில வாரத்தில் இருமல், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற சிக்கல்களால் ஆலிஸ் அங்குள்ள ஹேமில்டன் ஜெனரல் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட 3 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்க வேண்டிய நிலைக்கு ஆளானார். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு இருதய சிக்கல் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது என கூறியுள்ளனர்.
இதற்கான மருத்துவ செலவுக்கு ஜோசப் தனது தாய்க்கு முன்கூட்டியே 1 லட்சம் டாலர் (ரூபாய் 85,53,135) மதிப்புள்ள இன்சூரன்ஸ் காப்பீட்டை எடுத்திருந்தார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவ செலவுக்கான கோரிக்கையை மறுத்துள்ளது. இந்த இன்சூரன்ஸ் ஆவணத்தில், இதய செயலிழப்பு இருப்பது குறித்த நோய்களுக்கு இந்த காப்பீட்டுத் தொகையின் கீழ் காப்பீடு பெறுவதற்கு தகுதியற்றவர் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும் மருத்துவ செலவுக்கான மொத்த தொகையும் குடும்பத்தினரே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கோரிக்கையை ஆரம்ப காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்தாலும் ஒரு செய்தி நிறுவனம் தொடர்பு கொண்ட பிறகு, அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கை மறுபரிசீலனை செய்து மறு ஆய்வுக்குப் பிறகு அவர்கள் அந்த கோரிக்கையை அங்கீகரிக்க முடிவு செய்தனர்.
இதனால் ஜான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 57 லட்சம் வழங்கப்பட்டது. அவர்கள் மருத்துவ செலவுக்கான சுமையிலிருந்து விடுபட்டனர். இதுபோன்று சில நேரங்களில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஆவணத்தின் விளக்கங்கள், போடப்படும் ஒப்பந்தத்துடன் ஒத்துப்போகாத சூழ்நிலைகள் வரும். எனவே மருத்துவ காப்பீடு விண்ணப்பிக்கும் நபர்கள் கவனித்து ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகளை தெளிவாக கருத்தில் கொண்டு இதுபோன்ற திட்டத்தில் இணைய வேண்டும் என செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.