போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.
அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது.
போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், மார்ச் 2013-ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு "ஈஸ்டர் வாழ்த்துகள்" தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.
சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, "அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்" என்று கூறினார்.
ஆசிர்வாதம் வழங்கிய பிறகு, அவர் வாகனத்தில் ஏறி வாடிகன் சதுக்கத்தைச் சுற்றிவந்தார். அந்த நேரத்தில், பல முறை வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.
"அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன்'' என கார்டினல் ஃபாரெல் தெரிவித்தார்.
''இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்) ரோமின் பிஷப் பிரான்சிஸ், தந்தையிடம் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது''
''நற்செய்தியின் விழுமியங்களை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஏழைகளுக்கு மிகவும் ஆதரவாக வாழ அவர் நமக்கு கற்பித்தார்'' எனவும் அவர் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அதே நேரத்தில், பழமையான நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கருதும் Traditionalist-களிடையேவும் இவர் பிரபலமாக இருந்தார்.
அமெரிக்கா அல்லது உலகின் தெற்குப் பகுதியில் இருந்து வந்த முதல் போப் இவர்தான்.
இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஐந்து வார மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து திரும்பினார்.
உலக மக்களுக்கு போப்பின் இறுதி செய்திமறைந்த போப் பிரான்சிஸ் ஈஸ்டர் தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையே உலக மக்களுக்கான அவரது கடைசி செய்தியாக அமைந்தது. ஈஸ்டர் ஞாயிறன்று போப்பின் அறிக்கையை அவரது உதவியாளர் ஒருவர் வாசித்தார்.
அந்த செய்தியில்,"மத சுதந்திரம், சிந்தனைக்கான சுதந்திரம், கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் இன்றி அமைதி இல்லை" என போப் தெரிவித்திருந்தார்.
காசா மக்களையும், குறிப்பாக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்களையும் குறிப்பிட்ட அவர், அங்கு நிகழும் மோதல்கள் மரணத்தையும், அழிவையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த போர் "மோசமான மனிதாபிமான சூழ்நிலையை" உருவாக்குகிறது. உலகளாவிய யூத எதிர்ப்புவாதம் வளர்ந்து வருவது "கவலைக்குரியது" என்றும் அவர் கூறினார்.
"உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல மோதல்களில் கொலை செய்வதற்கான தாகம் எவ்வளவு பெரியதாக உள்ளது" என்று அவர் கூறினார்.
"அனைத்து இஸ்ரேலிய மக்களும் பாலஸ்தீன மக்களும், படும் துயரங்களுக்காக எனது அன்பை வெளிப்படுத்துகிறேன். போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுங்கள், பணயக்கைதிகளை விடுவியுங்கள். அமைதியான எதிர்காலத்தை விரும்பும் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவுங்கள்." எனவும் போப் கூறியுள்ளார்.
யுக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் "நீடித்த அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளைத் தொடர" ஊக்குவிப்பதாகவும் போப்பின் இறுதி அறிக்கை கூறுகிறது.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு