அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் இருக்கும் கர்பங்கா நீர்வீழ்ச்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருக்கிறார் ஃபேமிலி மேன் 3 வெப்தொடரில் நடித்த ரோஹித் பஸ்போர். இவர் தன் சக கலைஞர்கள் 9 பேருடன் சுற்றுலா சென்றார்.
அங்கு நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தவர் பிணமாக தான் மீட்கப்பட்டார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
ஏப்ரல் 27ம் தேதி மாலை 4 மணி அளவில் எங்களுக்கு ரோஹித் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்து நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது மணி 4.30 ஆகும். மாலை 6.30 மணி அளவில் ரோஹித்தின் உடல் மீட்கப்பட்டது என்றார்.
எதிர்பாராவிதமாக நீர்வீழ்ச்சியில் விழுந்திருக்கிறார் ரோஹித் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீசார்.ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு தவறி விழுந்திருக்கிறார் ரோஹித். மாலை அவரின் உடல் மீட்கப்பட்டது. ரோஹித் மரணத்தில் சந்தேகம் இல்லை என போலீஸ் தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரோஹித் நீர்வீழ்ச்சியில் விழுந்தது விபத்து அல்ல என அவரின் குடும்பத்தார் கூறியிருக்கிறார்கள்.
ரோஹித்தின் செல்போன் நண்பகல் 12 மணிக்கு சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது. ரோஹித்திக்கு நீச்சல் தெரியாது என்கிறார்கள் அவரின் குடும்பத்தார்.
ஃபேமிலி மேன் 3 வெப்தொடரில் நடித்தது குறித்து இன்ஸ்டாகிராமில் சந்தோஷமாக போஸ்ட் போட்டு வந்தார் ரோஹித். மேடை நாடங்களில் நடித்து வந்த அவர் குழந்தைகளுக்கு டிராமா பயிற்சி கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் கடந்த 20ம் தேதி போஸ்ட் செய்தார்.அது தான் அவரின் கடைசி போஸ்ட் என்பது தெரியாமல் போய்விட்டது. சக கலைஞர்களுடன் சந்தோஷமாக சுற்றுலா சென்றவர் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியும், கவலையும் அடைய வைத்திருக்கிறது.