Irfan: ``மன்னுச்சுகோங்க! நான் அப்படிப்பட்டவன் இல்ல; நடந்தது இதுதான்'' - யூடியூப்பர் இர்பான் விளக்கம்
Vikatan April 29, 2025 11:48 PM

பிரபல யூடியூப்பரான இர்பான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கார் விபத்து, குழந்தை பிறக்கும் முன்பே பாலினத்தைப் பொதுவெளியில் சொன்னது, பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ-வை யூடியூப்பில் பதிவிட்டது எனத் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிப் பேசுபொருளாகி வந்தார். பலரும் அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்து வந்தனர்.

அவ்வகையில் சமீபத்தில் கடந்த ரமலான் பண்டிகையின்போது சென்னை மவுண்ட் ரோட் சாலையோரத்தில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உடை, உணவுகள் தானமாக வழங்கும் காணொலியை அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

யூடியூப்பர் இர்பான்

அதில், இர்பான் காரில் அமர்ந்தபடி பொருள்களை தானம் வழங்கியபோது தானம் பெற்றவர்கள் போட்டிப்போட்டு காரின் உள் கைவிட்டதை எரிச்சலுடனும், தங்களை கையைப் பிடித்து இழுக்கிறார்கள் என்று சலிப்புடன் சொல்லி சிரித்ததாகவும், தானம் பெறும் சிறு குழந்தைகளை 'அதுங்க இதுங்க' என்று மரியாதைக் குறைவாகப் பேசியதாகவும் சர்ச்சைகள் கிளம்பின.

இதையெல்லாம் தாண்டி இந்தக் காணொலியை நகைச்சுவையுடன் எடிட் செய்து வெளியிட்டது காண்போரை முகம் சுழிக்க வைத்தது.

இந்தச் சம்பவம் யூடியூப்பில் விவதாப் பொருளாகி, பலரும் இர்பானின் செயலைக் கண்டித்திருந்தனர். 'தெரியாமல் கூட வறுமையில் இருப்பவர்களை கிண்டலாகப் பேசியிருக்கலாம். ஆனால், எடிட் செய்யும்போது அது தெரிந்தும் வறுமையை நையாண்டி செய்யும் வகையில் பதிவிட்டிருக்கக் கூடாது. தேவையற்ற காட்சிகளை நீக்கியிருக்கலாம்" என்று அறிவுரையும் கூறியிருந்தனர்.

ஆனால் இதற்க்கெல்லாம் இர்பான் மன்னிப்புக் கேட்காதது அவரைப் யூடிப்பில் பின் தொடர்பவர்களையே எரிச்சலையடைச் செய்ய, பலரும் அவரது யூடியூப் சேனலை விட்டு வெளியேறத் தொடங்கினர். அவரது சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையும் மலமலவென சரியத் தொடங்கியது.

இவ்வளவு நடந்தும் இந்தச் சம்பவம் குறித்து விளக்கமோ, மன்னிப்போ இர்பான் கொடுக்காததுதான் அவரது யூடியூப் சப்ஸ்கிரைபர்களுக்கே முகச் சுழிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 29) இந்த சர்சைகளுக்கு விளக்கமளித்து, மன்னிப்பும் கேட்டு 'நான் செய்தது தவறுதான் I Was Wrong' என வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் இர்பான்.

அதில், "அந்த சர்ச்சைகள் நடந்தபோதே நான் அது குறித்து விளக்கமளிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், என்னோட நலம் விரும்பிகள் 'இப்போது விளக்கமளிக்க வேண்டாம்' என்று அறிவுரை வழங்கியதால் அமைதியாக இருந்துவிட்டேன்.

யூடியூப்பர் இர்பான்

நான் அந்தமாதிரி ஆள் கிடையாது

"நான் வறுமையில் இருப்பவர்களை ஏளனமாகப் பேசியதாக சொல்கிறார்கள். நான் அந்த மாதிரி ஆள் கிடையாது. நானும் அங்கிருந்துதான் வந்திருக்கேன். நான் ஒருபோதும் வறுமையை ஏளனம் செய்பவன் அல்ல. இல்லாதவங்களைப் பார்த்து சிரிப்பவன் அல்ல நான்."

அன்பினால் 'அதுங்க இதுங்க' என்று பேசினேன்

"நான் சாலையோரத்தில் இருக்கும் சின்னக் குழந்தைகளை அதுங்க, இதுங்க என மரியாதைக் குறைவாகப் பேசியதாக விமர்சித்தார்கள். நான் என் வீட்டில் இருக்கும் குழந்தைகளை அப்படித்தான் அன்புடன் பேசுவேன். அந்தமாதிரியான அன்பினால்தான் அந்தக் குழந்தைகளை 'அதுங்க இதுங்க' என்று பேசினேன்."

வீடியோக்களை ப்ளாக் செய்ததது நான் இல்லை

"என்னை விமர்சித்தவர்களின் வீடியோக்களை நான் ப்ளாக் செய்யவில்லை. 'Divo' என்ற நிறுவனம்தான் என்னுடைய வீடியோவைப் பார்த்துக் கொள்கிறது. அவர்கள்தான் ஆட்டோமெட்டிக்காக என்னோட வீடியோவைப் பயன்படுத்துவோரின் வீடியோவை ப்ளாக் செய்தார்கள். அது அவர்களின் வேலை."

யூடியூப்பர் இர்பான்

நான் பண்ணது தப்புதான்

"என்கூட இருப்பவர்கள், நான் மதித்த நபர்கள் என்னை கடுமையாக விமர்சித்தது எனக்கு ரொம்ப மன வருத்ததைத் தந்தது. தனிமைப்படுத்தப்பட்டதுபோல் உணர்ந்தேன். நான் பண்ணது தப்பு. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். என்னால் மனம் வருந்திய அந்த நபர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக் கொள்வேன்." என்று மன்னிப்புக் கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டு விளக்கமளித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.