இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ள நிலையில், ஸ்ரீநகர் முழுவதும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு வருவதாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியிருக்கிறார். அவரது எக்ஸ் வலைத்தள பதிவில், உமர் அப்துல்லா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று பஞ்சாபின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் விளக்குகளை அணைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவும் பாகிஸ்தானும் 'நிலம், வான் மற்றும் கடல் வழி' தாக்குதலை இந்திய நேரப்படி இன்று மாலை 5:00 மணி முதல் நிறுத்தும் என கூறியுள்ளார்.
''பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இன்று பிற்பகல் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலிடம் பேசினார். இரு தரப்பும் முழு சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன'' எனவும் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல் எப்போதும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.
''ராணுவ நடவடிக்கை மற்றும் வெடிகுண்டு தாக்குதலை நிறுத்துவதற்கான புரிதலை இந்தியாவும் பாகிஸ்தானும் எட்டியுள்ளன'' என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக பேசியதாகவும் அதன் முடிவாக கூட்டு புரிதல் எட்டப்பட்டதாகவும் இஷாக் டார் ஜியோ டிவியிடம் கூறியுள்ளார்.
சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டிரம்ப், ''அமெரிக்காவின் நீண்ட இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன'' என கூறியுள்ளார்.
பொது அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ள டிரம்ப், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
''இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன மற்றும் பொதுவான நாட்டில் பரந்த அளவிலான பிரச்னை குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள்'' என அமெரிக்க வெளியுறத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உள்ளிட்ட மூத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் தானும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸும் கடந்த 48 மணிநேரம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று மாலை இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
அப்போது பேசிய கடற்படை கேப்டன் ரகு நாயர், ''சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படுகிறது. கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவம் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.
மேலும், ''பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மேற்கொண்ட பதில் நடவடிக்கைகள், கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பொறுப்புணர்வுடனும் இருந்தன'' என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங்,'' தவறான தகவல்'' பிரசாரத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் பல முயற்சிகளை எடுத்ததாக கூறினார்.
''பாகிஸ்தான் இழப்புகளைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது'' என்று வியோமிகா சிங் கூறினார்.
அடுத்து பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, ''முதலில், பாகிஸ்தான் தனது ஜி.எஃப் 17ஐக் கொண்டு இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியதாக கூறியது. இது முற்றிலும் பொய்யான தகவல். அதேபோல, இரண்டாவதாக சிர்சா, பதான்கோட், ஜம்மு, பட்டிண்டா, நலியா மற்றும் புஜ்-இல் உள்ள விமானப்படைத் தளங்களை தாக்கியதாவும் பிரசாரம் செய்யப்பட்டது. இதுவும் பொய்ப்பிரசாரம் தான்'' என்றார்.
மேலும், ''சண்டிகர் மற்றும் பியாஸில் உள்ள இந்திய ஆயுதக் கிடங்கு சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதுவும் பொய்யான தகவல். நாங்கள் இன்று காலை கூறியதுபோல, அவை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன.''
''பாகிஸ்தானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர்களது மூத்த ராணுவ அதிகாரிகள் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளனர். இந்திய ராணுவம், மசூதிகளை சேதப்படுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். நான் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, இந்திய ராணுவம் கலாசாரத்தை மதிக்கிறது.
இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு மிக அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடைய நிலம் மற்றும் வான்வெளி சொத்துக்களுக்கு சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.'' என்றார் சோஃபியா குரேஷி.
இந்தியாவில் பொதுமக்களை குறிவைத்து தாக்கியதாக குற்றச்சாட்டு - பாகிஸ்தான் அமைச்சர் என்ன கூறினார்?ஜம்மு காஷ்மீரில் குடியிருப்புப்பகுதிகளில் நடந்த வான்வழித் தாக்குதலில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சோதமடைந்துள்ளன.
''ஜம்மு நகரின் ரெஹாரி காலனியில் நடந்த தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும், பல வாகனங்களின் ஜன்னல்கள் உடைந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்'' என பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா கூறினார்.
பாகிஸ்தான் இந்தியாவில் பொது மக்களைக் குறிவைத்து தாக்குவதாக இந்திய அரசின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அதாவுல்லா தரார் மறுத்துள்ளார்.
"பாகிஸ்தான் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துள்ளது" என்றார் அவர்.
மேலும், பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் உரிமை இருப்பதாகவும் அவர் கூறினார்.
'இரவு முழுவதும் குண்டு வெடிப்புகள்' – பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம்பாகிஸ்தானின் "ஏவுகணை மற்றும் டிரோன்களால்" குறிவைக்கப்பட்ட நகரங்களில் பதான்கோட்டும் ஒன்று என இந்திய அரசின் அறிக்கை ஒன்று கூறியது.
பதான்கோட்டில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித், "எக்கள் குழுவினர் இரவுநேர துப்பாக்கிச் சூடுகள் மற்றும் அதிகாலை வரை தொடர்ந்த குண்டுவெடிப்புகளின் சத்தத்தால் விழித்தே இருந்தோம். விரைவில், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நிர்வாகம், ஊழியர்களிடையே பரவியிருந்த அச்சத்தால் ஹோட்டலை மூட முடிவு செய்து, எங்களை வெளியேறுமாறு கூறினார்கள்," என்று தெரிவித்தார்.
அங்கிருந்து வெளியேறும் வழியில், கடைகள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு இருப்பதைக் கண்டதாகவும், சாலைகள், பேருந்து நிலையங்கள் காலியாக இருந்ததாகவும் ஜுகல் குறிப்பிட்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நகரத்தின் இந்திய விமானப்படை தளம் ஆயுதமேந்திய குழுவினரால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"நேற்றிரவு நாங்கள் கண்ட ஓர் அசாதாரண காட்சி இது. இந்த குண்டுவெடிப்புகளின் பலத்த சத்தம் காதுகளைச் செயலிழக்க வைக்கும் அளவுக்கு இருந்தது" என்று 70 வயதான கடைக்காரர் அசோக் மேத்தா ஒரு நாள் முன்னதாகத் தன்னிடம் கூறியதாகவும் ஜுகல் புரோஹித் கூறினார்.
இந்த குண்டுவெடிப்புகள், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான 1971 போரின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததாக அசோக் மேத்தா குறிப்பிட்டார்.
"எனக்கு 16 வயது இருந்தபோது, நானும் என் நண்பர்களும் விமானங்கள் கீழே விழுவதையும் குண்டுகள் வீசப்படுவதையும் தவறாமல் பார்ப்போம். இந்த முறை நடந்தது அவ்வளவு தீவிரமாக இல்லை. கடந்த முறை போல இப்போது நடக்காது என்று நம்புகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹோட்டலில் இருந்து வெளியேறிய பிறகு, சுமார் 5-6 கி.மீ காரில் பயணித்து, அண்டை மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தை அடைந்ததாகவும், தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித் தெரிவித்தார்.
இந்தியா, பாகிஸ்தானுடன் சௌதி பேச்சுவார்த்தைசௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சௌதி வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்தத் தொலைபேசி உரையாடலின்போது, பதற்றங்களைக் குறைக்கவும், நடந்து கொண்டிருக்கும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் தேவையான முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதிலும் இரு நாடுகளுடனும் சமச்சீரான, நெருங்கிய உறவைப் பேணுவதிலும் சௌதி உறுதியாக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை (மே 10) ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், "இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்புகள், மின் அமைப்புகள், சைபர் அமைப்புகள் போன்றவை பெரிய அளவில் அழிக்கப்பட்டதாக வெளியாகும் கூற்றுகள் முற்றிலும் தவறானவை" என்று தெரிவித்தார்.
மேலும், "தயவு செய்து பாகிஸ்தான் அரசால் பரப்பப்படும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்," என்றும் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கேட்டுக்கொண்டார்.
"அமிர்தசரஸை நோக்கி இந்தியா ஏவுகணைகளை ஏவியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் ஓர் அபத்தமான கூற்றும் வெளியிடப்படுகிறது. இந்தியாவை பிளவுபடுத்தும் இந்த பலவீனமான முயற்சிகள் தோல்வியடையும்," என்று குறிப்பிட்டார்.
அதோடு, ஆப்கானிஸ்தான் மீது இந்தியா ஏவுகணைகளை ஏவியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசிய விக்ரம் மிஸ்ரி, "இந்திய ஏவுகணைகள் ஆப்கனை குறிவைத்ததாகச் சொல்வது முற்றிலும் அபத்தமானது," என்றார்.
"இது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்த நாடு ஆப்கனின் பொது மக்களையும் அவர்களின் உள்கட்டமைப்புகளையும் பலமுறை குறிவைத்துள்ளது என்பதை ஆப்கன் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை" என்றார்.
அதேவேளையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரும் தங்கள் நாட்டின் மீது இந்தியா ஏவுகணைகளை ஏவியதாக வெளியான தகவலை உறுதியாக மறுத்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீர் ஆகியோரிடம் பேசியுள்ளார்.
ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் மார்கோ ரூபியோவுடனான உரையாடல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
"இன்று காலை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோவுடன் நான் உரையாடினேன். இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் ஒரு கட்டுப்பாட்டுடனும் பொறுப்புடனும் இருந்து வருகிறது. எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஜெய்சங்கர் உடனான உரையாடல் குறித்து அமெரிக்காவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கைப்படி, "அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேசினார். பதற்றங்களைக் குறைக்கவும் தவறான புரிதல் ஏற்படாமல் இருக்கவும் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று மார்கோ ரூபியோ வலியுறுத்தினார்."
இதனுடன் எதிர்காலத்தில் எந்தவொரு சர்ச்சையையும் தவிர்க்க இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா உதவ முடியும் என்றும் மார்கோ ரூபியோ கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருடனான பேச்சுவார்த்தை குறித்தும் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.
"இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருடன் வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ பேசினார். அப்போது, பதற்றங்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய இரு தரப்பினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் எதிர்கால மோதலைத் தவிர்க்க பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்க உதவும் என்று தெரிவித்தார்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று (மே 10) நடந்த செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோபியா குரேஷி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா மேற்கொண்ட பதில் தாக்குதல் குறித்து விளக்கினார்.
அப்போது, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்கு எல்லை நெடுகிலும் தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் டிரோன் ஊருவல்கள் மற்றும் கனரக ஆயுதத் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, ஸ்ரீநகரில் இருந்து நலியா வரை 26 இடங்களில் வான் வழியாக ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன மற்றும் அவற்றில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டன.
பஞ்சாபில் உள்ள ராணுவ தளத்தில் அதிகாலை 1:40 மணிக்கு அதிவேக ஏவுகணை ஏவப்பட்டதாகவும் அதை இந்தியா செயலிழக்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல்கள் குறித்த தகவல்களையும் கர்னல் சோபியா குரேஷி பகிர்ந்து கொண்டார்.
"பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்த பிறகு, இந்திய ஆயுதப்படைகள் திட்டமிட்ட முறையில் பதிலடி தாக்குதல்களை நடத்தின. பாகிஸ்தானின் தொழில்நுட்ப கட்டமைப்புகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் குறிவைக்கப்பட்டன."
"ரஃபிகி, முரித், சக்லாலா, ரஹிம்யார் கான், சுக்கூர் மற்றும் சுனியாவில் உள்ள பாகிஸ்தான் இராணுவ தளங்கள் துல்லியமான ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களால் தாக்கப்பட்டன." என்றார் அவர்.
பாகிஸ்தானின் பஸ்ரூரில் அமைந்துள்ள ரேடார் தளத்தையும் சியால்கோட்டில் உள்ள விமானப் போக்குவரத்து தளத்தையும் இந்தியா குறிவைத்ததாக கர்னல் குரேஷி கூறினார்.
பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த அனைத்து பதிலடி நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டு, அது உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நான்காவது நாளாக நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி, இந்திய விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருடன் இணைந்து இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானின் நடவடிக்கைகள் தொடர்ந்து ஆத்திரமூட்டும் வகையில் உள்ளன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது," என்று கூறினார்.
இந்தியாவின் இந்தத் தகவல்கள் குறித்து பாகிஸ்தான் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதலா?பாகிஸ்தானின் 3 விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
தனது 3 ராணுவ விமான தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சியில் பேசும்போது, இதற்கு பாகிஸ்தான் ராணுவம் உரிய வகையில் "பதிலளிக்கும்" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் பெரும்பாலான ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறினார். நாட்டின் படைகள் 'முழுமையாக தயாராக' இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் கூறும் விமானப்படைத் தளங்களில் ஒன்று, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் ஆகும்.
பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா இதுவரை ஏதும் கூறவில்லை.
இந்தியா மீது பதிலடி நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது
பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை ஆகியவை இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையான ஐஎஸ்பிஆரின் கூற்றுப்படி, பாகிஸ்தான் இந்த பதிலடி நடவடிக்கையை 'ஆபரேஷன் பன்யன் மார்ஸ்' என்று பெயரிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இதுவரை எதுவும் கூறவில்லை.
ஜம்மு நகரத்தின் ரெஹாரி காலனி மீது நேற்றிரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும், பல வாகனங்களின் ஜன்னல்கள் உடைந்து போனதாகவும் உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை என்று மக்கள் கூறினர்.
உள்ளூர்வாசி ராகேஷ் குப்தா கூறுகையில், "ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது. அந்தப் பகுதி முழுவதும் புகையால் நிரம்பியிருந்தது. எங்கும் பயம் மற்றும் பீதி நிறைந்த சூழல் நிலவியது. பாகிஸ்தான் ஏன் சாதாரண மக்களைத் தாக்குகிறது?" என்றார்.
பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, சிலர் காயமடைந்துள்ளனர், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிபிசி குழு அங்கு இருந்தபோது ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் சம்பவ இடத்திற்கு வந்தார். ஆனால் போர் விமானங்கள் மேலே பறக்கத் தொடங்கிய போது அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது.
வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டதால், மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் ஒரு அதிகாரி உயிரிழந்ததாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ராஜௌரியில் இருந்து சோகமான செய்தி. ஜம்மு-காஷ்மீர் நிர்வாக சேவையின் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று அவர் துணை முதல்வருடன் மாவட்டத்தில் இருந்தார். எனது தலைமையில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்," என்று பதிவிட்டுள்ளார்.
ராஜௌரி மீது பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாக உமர் அப்துல்லா கூறினார்.
"இன்று பாகிஸ்தான் ராஜௌரி நகரத்தை குறிவைத்து ஷெல் தாக்குதல் நடத்தியது. இதன் போது, கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாபாவின் வீடு குறிவைக்கப்பட்டு, தாக்குதலில் அவர் இறந்தார்." என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு