செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமனி கட்சி தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியினருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் கூட்டணி குறித்தும் நான் தான் முடிவு செய்வேன் எனவும் பேசினார்.
இது குறித்து ” நம்மளுடைய கட்சியில் இருந்தவர்கள் முன்னதாகவே வேற வேளைக்கு செல்ல தொடங்கிவிட்டார்கள். அப்படி இருந்தும் நாம் யானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றிபெற்றோம். அதன்பிறகு கூட்டணி வைத்து இப்போது 5 தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்று இருக்கிறோம். இது நமக்கு உண்மையாகவே வெட்கமாக இல்லையா? இது அசிங்கமாக இல்லையா? கோபம் கூட வரவில்லையா?
கோபம் வரவில்லை ஏனென்றால், நம்மளுடைய கட்சியில் நம்மாளுங்க நம்மளையே காட்டிக்கொடுத்துவிட்டோம். நம்முடைய கட்சியிலே இருந்தவர்கள் நமக்கே ஓட்டு போடவில்லை. ஆனால் இனிமே நீங்கள் அப்படி இருக்க கூடாது. அப்படி இருந்தால் உங்களுடைய கணக்கையே முடித்துவிடுவேன். காக்கா பிடித்தாலும் எதுவும் நடக்காது.. வேலை செய்யவில்லை என்றால் எம்எல்ஏவாகவும் இருந்தாலும் சரி கடலில் தூக்கி வீசிவிடுவேன். உங்களை நம்பி தேர்தலில் இறங்கினால் அவ்வளவு தான்” எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும் ” நிறைய பேரு கேக்குறாங்க..கூட்டணி எங்கே யாருகூட எப்போது கூட்டணி என்று. கூட்டணி குறித்து முடிவு செய்ய நான் இருக்கிறேன் நான் தான் முடிவு செய்வேன். அதைப்பற்றி நீ ஒன்னும் கவலைப்படவேண்டாம். உனக்கு சீட்டு கிடைக்கணும் நீ எம்ஏல்ஏ ஆக வேண்டும் என்றால் நாளையில் இருந்து கூட போய் வேலை செய்ய தொடங்கு. ஏனென்றால் உன்னுடைய உழைப்பை பற்றிய கணக்கு எடுக்கப்படுகிறது” எனவும் ராமதாஸ் பேசியுள்ளார்.