சத்தீஸ்கர் மாநிலத்தில் டிரெய்லர் மீது மினி லாரி மோதியதில் 13 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், சடோ கிராமத்தில் வசித்து வருபவர்கள் பனா பனாரசியில் நடந்த சத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அவர்கள் மினி லாரியில் நள்ளிரவு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராய்ப்பூர்-பலோதாபஜார் சாலை அருகே டிரெய்லர் மீது மினி லாரி திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் உட்பட 13 பேர் பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் கௌரவ் சிங் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டஆட்சியர் மேலும் தெரிவித்துள்ளார்.