தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் சண்முகம் (45), இவர் முள்ளக்காடு மெயின் ரோட்டில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் 10 வருடங்களாக ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணுக்காக ஏராளமான பணத்தை செலவு செய்தாராம். இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் முள்ளக்காடு நடுத்தெருவை சேர்ந்த பொன்துரை மகன் பொன் குமார் (29) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதை நேரில் பார்த்த சண்முகம் அந்த பெண்ணை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொன்குமார் தனது நண்பரான முள்ளக்காடு காந்தி நகரை சேர்ந்த மீராசா மகன் காசிம் மன்சூர் (32) என்பவருடன் சேர்ந்து நேற்று இரவு 11 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது சண்முகத்தை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார்களாம்.
இதில் பலத்த காயம் அடைந்த சண்முகம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து பொன்குமார் மற்றும் காசிம் மன்சூர் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.