உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத்தில் ஹைடெக் கல்லூரியில் பிபிஏ இறுதியாண்டு படித்து வரும் மாணவர் திருவ் தியாகி. இவரை நால்வருக்கும் மேற்பட்ட நபர்கள் பேஸ்பால் பேட்கள், ராடுகள், மரக்கட்டைகள் இவைகளாஅல் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்மநபர்கள் அவரை பட்டப்பகலில் கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படுகாயங்களுடன் மாணவர் சாலையில் விழுந்து தவித்ததை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதலில் சிக்கிய திருவ் தியாகி ஹாபூரைச் சேர்ந்தவர். மாணவர் உயிருக்கு போராடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு சென்றனர். தற்போது, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பிரதம் வத்ஸ், அலோக், சுமித் மற்றும் நக்குல் சங்க்வான் ஆகிய நால்வருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர் ஏற்கனவே சில மாணவர்களுடன் கடந்த ஆண்டு ஒரு விளையாட்டு நிகழ்வில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதன்பிறகு அவர் கல்லூரி வகுப்புகளுக்கே வராமல் தேர்வுகளுக்கு மட்டும் வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் தொடர்ந்து மயங்கி விழுவதுடன், மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உறவினர்கள் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.