ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், -அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தம்பதிக்கு தேஜ் பிரதாப், தேஜஸ்வி என இரண்டு மகன்கள் மற்றும் மிசா பாரதி உள்ளிட்ட ஏழு மகள்கள் உள்ளனர்.தேஜ் பிரதாப் யாதவ், முன்னாள் அமைச்சர்; தேஜஸ்வி யாதவ், முன்னாள் துணை முதல்வர். தேஜஸ்வி தான், கட்சியை வழிநடத்துகிறார்.ஆரம்பத்தில் இருந்தே மூத்த மகன் தேஜ் பிரதாபுக்கும், குடும்பத்தினருக்கும் அவ்வப்போது பிரச்னை எழுவது உண்டு.
பீஹார் முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யாவை, தேஜ் பிரதாபுக்கு கடந்த 2018ல் திருமணம் செய்து வைத்தனர்.ஆனால், இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில், சமூக வலைதளமான பேஸ்புக்கில் தேஜ் பிரதாப் யாதவ் நேற்று வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஒரு பெண்ணுடன், தான் இருக்கும் படத்தை பதிவிட்ட தேஜ் பிரதாப், 'என்னுடன் படத்தில் இருக்கும் இவர் அனுஷ்கா யாதவ். இருவரும், 12 ஆண்டுகளாக தொடர்பில் இருக்கிறோம்; ஆழமாக நேசிக்கிறோம். நீண்ட நாளாக இந்த விஷயத்தை சொல்ல விரும்பினேன்; வார்த்தைகள் கிடைக்கவில்லை. தற்போது, இந்த படத்தின் வாயிலாக, என் இதயத்தை உங்களுக்கு திறந்து காட்டுகிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.
அனுஷ்காவுடன் 12 ஆண்டுகளாக தொடர்பில் இருந்தால், 2018ல் எதற்காக முன்னாள் அமைச்சரின் மகளை திருமணம் செய்தார்? அது கட்டாய திருமணமா என, பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பி விமர்சித்தனர்.
ஆனால், தன் பேஸ்புக் கணக்கை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்து விட்டதாக, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தேஜ் பிரதாப் கூறினார். அது நம்பும்படியாக இல்லை.ஏனெனில், விமர்சனங்கள் எழுந்ததும், அனுஷ்காவுடன் தேஜ் பிரதாப் இருந்த 'பேஸ்புக்' பதிவு நீக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த விவகாரம், லாலு பிரசாத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், கட்சியில் இருந்து தேஜ் பிரதாபை ஆறு ஆண்டுகள் நீக்குவதாகவும், குடும்பத்தில் இருந்து தள்ளி வைப்பதாகவும் அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தேஜ் பிரதாபின் செயல்பாடுகளும், பொறுப்பற்ற நடத்தையும், எங்கள் குடும்பத்தின் மதிப்பு, மரியாதைக்கு ஏற்றதாக இல்லை.
கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் அவரை நீக்குகிறேன். இனிமேல் அவருக்கு கட்சியிலும், குடும்பத்திலும் எந்த பங்கும் இருக்காது.
தனிப்பட்ட வாழ்க்கையில், தார்மீக மதிப்புகளை புறக்கணிப்பது என்பது சமூக நீதிக்கான நம் போராட்டத்தை பலவீனமாக்குகிறது.
தேஜ் பிரதாப், தன் வாழ்க்கையைப் பற்றி எந்த முடிவுகளையும் எடுக்கலாம்.
அவருடன் இருக்க விரும்புவோரும், அது பற்றி முடிவு செய்யலாம். ஆனால், பொது வாழ்க்கையில் நான் எப்போதும் மரியாதையை கடைப்பிடிக்கிறேன். என் கீழ்ப்படிதலில் உள்ள குடும்ப உறுப்பினர்களும் அதை பின்பற்றுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
பீஹாரில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைமையின் குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சை, அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.