பாமகவில் குடும்ப விவகாரம் காரணமாக தந்தை மகன் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. இதன்படி டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களையும், அன்புமணி தாயார் மீது பாட்டில் வீசித் தாக்கியதாகவும் பாஜகவுடனான கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் எனவும் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பவர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து அடுத்தடுத்து நீக்கிவருகிறார் ராமதாஸ்.
அந்தவகையில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து மயிலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். சிவக்குமாருக்கு பதிலாக விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாகவும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.