ஏற்கனவே, “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது,” என்று கமல்ஹாசன் கூறியது, ஒரு பெரிய நெருப்பைப் பற்றவைத்து கொழுந்து விட்டே எரிந்துகொண்டிருக்கும் நிலையில், பாஜக பிரமுகர் ஒருவர் இன்று, RCB தனது வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், “இந்த அணியில் எத்தனை கன்னடர்கள் இருப்பார்கள் என்பதை யாராவது சொல்ல முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
RCB கேப்டன் ரஜத் படிதார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர், விராட் கோலி டெல்லியைச் சேர்ந்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சால்ட்; உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் புவனேஷ்வர் குமார்; ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஹாசில்வுட், இந்த அணியில் எத்தனை கன்னட விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.
மேலும் ஐபிஎல் அணிகளைப் பொறுத்தவரை, பணமே முக்கியமாக கருதப்படுகிறது. இன்று RCB-யில் இருப்பவர், நாளை JCB அணிக்கு சென்று விடுவார். எனவே, விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்; வெறித்தனமான ரசிகர்களாக இருக்க வேண்டாம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
“ரஞ்சி கோப்பை போன்ற உள்நாட்டு போட்டிகள் வேறுபட்டவை. ரஞ்சி போட்டியில் முழுக்க முழுக்க கர்நாடக மாநில வீரர்களே இருப்பார்கள். ஆனால், ஐபிஎல் அப்படி கிடையாது. முழுக்க முழுக்க பணத்தை அடிப்படையாகக் கொண்டது. உலகம் முழுவதிலும் இருந்து வீரர்களை தேர்வு செய்வார்கள்.
இப்படி ஒரு அணிக்காக எதற்காக நாம் நம்முடைய தலையை சிதைக்க வேண்டும்? விளையாட்டு வீரர்கள் மட்டுமே உலகளவில் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், விவசாயிகள் இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்று ரவி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் பற்றவைத்த மொழி பிரச்சனையை இன்னும் தீராத நிலையில், தற்போது ஐபிஎல் RCB அணி குறித்து பாஜக பிரமுகர் ரவி கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெங்களூரில் வெற்றியை கொண்டாடியபோது ஏற்பட்ட விபரீதத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
“ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்து வந்து விளையாடுபவர்களுக்காக நம்முடைய உயிரை ஏன் கொடுக்க வேண்டும்?” என்ற கேள்வி தற்போது பல கன்னட மக்கள் மனதில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.