கடலூர் வட்டம் ரெட்டிச்சாவடி அருகே சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் செடல் திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. திருவிழாவில் 5 பேர் சேர்ந்து சாமியை ஊர்வலமாக தூக்கிச் சென்றனர். அப்பொழுது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் உரசியது.
இதில் சாமியை தூக்கிச் சென்ற 5 பேர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் புதுச்சேரி, அரியாங்குப்பம் மனவெளி பெரியார் நகரில் வசித்து வரும் கலியமூர்த்தி மகன் கர்ணாசந்திரன்(40) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சின்ன இருசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவமணி (22), ஹரி கிருஷ்ணன் மகன் கண்ணன் (55), பெருமாள் மகன் முருகையன் (35) மற்றும் மணிகண்டன் மகன் ஸ்ரீவேஷ் (6) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக இவர்கள் மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சமப்வம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கர்ணாசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.