அதிர்ச்சி... பாறையில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலியான சோகம்!
Dinamaalai June 08, 2025 09:48 PM

தனது வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக குளிப்பதற்காக சென்ற போது, பாறையின் மீது இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த ஐ.டி.ஐ. மாணவன் பரிதாபமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வேளி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவருடைய மகன் ஆதித்யன் (18). இவர் திருவனந்தபுரம் பகுதியில் ஐடிஐ படித்து வந்தார். இந்நிலையில், ஆதித்யன் தனது நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு அம்பூரி பகுதிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே உள்ள கருப்பையாற்றில் இறங்கி அனைவரும் குளித்தனர்.

கருப்பையாற்றின் தொடக்க பகுதியில் பாறைகள் நிறைந்த இடத்தில் அனைவரும் குளித்த நிலையில், ஆதித்யன் அங்கிருந்த ஒரு பாறையின் மீது ஏறியுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக கால் தவறி பாறையில் விழுந்த ஆதித்யனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், உடனடியாக ஆதித்யனை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆதித்யன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.