கேரள மாநிலம் திருவனந்தபுரம் வேளி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவருடைய மகன் ஆதித்யன் (18). இவர் திருவனந்தபுரம் பகுதியில் ஐடிஐ படித்து வந்தார். இந்நிலையில், ஆதித்யன் தனது நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு அம்பூரி பகுதிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே உள்ள கருப்பையாற்றில் இறங்கி அனைவரும் குளித்தனர்.
கருப்பையாற்றின் தொடக்க பகுதியில் பாறைகள் நிறைந்த இடத்தில் அனைவரும் குளித்த நிலையில், ஆதித்யன் அங்கிருந்த ஒரு பாறையின் மீது ஏறியுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக கால் தவறி பாறையில் விழுந்த ஆதித்யனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், உடனடியாக ஆதித்யனை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆதித்யன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.