உடனே ஈரானை விட்டு வெளியேறுங்க... இந்திய தூதரகம் அவசர உத்தரவு!
Dinamaalai June 17, 2025 12:48 PM

கடந்த சில நாட்களாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் அதிகரித்து, தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, உடனடியாக  ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேற இந்திய தூதரகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது. 3 நாட்களில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் தலைநகரில் குறைந்தது 73 பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் எஸ்மாயில் பக்காய் தெரிவித்தார்.

தற்போது, தெஹ்ரானில் இருந்து இந்தியர்கள் வெளியேறும்படி இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரான் முழுவதும் உள்ள இந்தியர்கள் சமூக வலைதளங்கள் மூலம் உதவியை நாடுகிறார்கள். உதவியை ஒருங்கிணைக்கவும், தகவல்தொடர்புகளை ஒழுங்கமைக்கவும், இந்தியாவிற்கு பாதுகாப்பான பாதையை ஒழுங்கமைக்கவும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தால் ஒரு குழு உருவாக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், ஈரானிய அதிகாரிகளுடன் இணைந்து, இந்திய மாணவர்களை தலைநகரில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றத் தொடங்கியுள்ளது. அதன்படி, ஈரானில் உள்ள இந்தியர்களை பேருந்து மூலம் அர்மேனியா எல்லைக்கு அழைத்து வரவும், அங்கிருந்து விமானம் அல்லது கப்பல் மூலம் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. ஈரானில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் உள்ளதால் அவர்கள் வெளியேற முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. 2024 புள்ளிவிவரங்களின்படி, ஈரானில் சுமார் 10,000 இந்திய குடிமக்கள் உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.