தொடரும் அவலம்... நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி... தமிழக மாணவி பரபரப்பு புகார்!
Dinamaalai June 17, 2025 12:48 PM

நீட் தேர்வு அறிமுகப்படுத்த பட்டதில் இருந்தே தொடர்ந்து சர்ச்சைகளும் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் குளறுபடிகள் இருப்பதாக கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் வசித்து வருபவர் நெல்சன். இவரது மகள் அபிஷ்யா. சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் அபிஷ்யா 680 மதிப்பெண்களும், இந்தியளவில் 40வது ரேங்க் என்றும் முதலில் மதிப்பெண் நகல் பதிவிறக்கத்தில் காண்பித்துள்ளது. ஆனால், தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவர்களின் பட்டியலில் மாணவி அபிஷியாவின் பெயரே இடம் பெறவில்லை. இதனால், மீண்டும் பதிவிறக்கம் செய்து பார்த்த போது மாற்று முடிவுகள் கொண்ட ஓ.எம்.ஆர், ஷீட் வந்துள்ளது. 

இருவேறு ஓ. எம்.ஆர்., ஷீட் வந்ததால் சம்மந்தப்பட்ட தேசிய தேர்வு முகமை மெயிலுக்கு மாணவி சார்பில் புகார் மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 680 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு 88.296852 பர்சன்டேஜ் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஏனெனில் 680 மதிப்பெண்கள் எடுத்தால் 99. 985 முதல் 99.997 வரையிலான பர்சன்டேஜ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நீட் தேர்வு முடிவில் மாணவி எடுத்த மதிப்பெண்கள் அதற்காக வழங்கப்பட்ட பர்சன்டேஜ் மற்றும் ஆல் இந்தியா தரவரிசை என முற்றிலும் முரண்பட்டதாக உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.