அன்புமணி ராமதாசின் மகள்கள், ராமேஸ்வரத்தில், அம்மன் கோவில் முன்பு உள்ள அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா தனது மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுமித்ரா ஆகிய இருவருடனும் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தார்.
அங்கிருந்து தனுஷ்கோடி சாலையில் உள்ள ராமநாதசுவாமி கோவிலின் உப கோவிலான நம்புநாயகி அம்மன் கோவிலுக்கு சென்ற செளமியா அன்புமணி, தனது மகள்களுடன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் அன்புமணியின் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுமித்ரா ஆகிய இருவரும் கோவில் முன்பு உள்ள அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அரைக்கப்பட்ட மஞ்சள் மற்றும் பூ மாலை, மாம்பழங்களை நம்புநாயகி அம்மனுக்கு படைத்து செளமியா அன்புமணி தனது மகள்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
செளமியா அன்புமணி தொடர்ந்து ஆன்மிக பயணங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சபரிமலைக்கு சென்றிருந்த செளமியா அன்புமணி, தனது கனவு நிறைவேறியதாக கண்ணீர் மல்க ஐயப்பனை தரிசித்த வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.