ஜூஸ் கடைகளில் ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை! மீறினால் கடும் நடவடிக்கை! - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!
Webdunia Tamil June 19, 2025 02:48 PM

தமிழ்நாட்டில் அனைத்து குளிர்பான, பழச்சாறு கடைகளிலும் ப்ளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏராளமான குளிர்பான, பழச்சாறு கடைகள், சாலையோர இளநீர், சர்பத் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த கடைகளில் மக்கள் குடிக்கும் பானங்களுக்கு ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா வைத்து கொடுக்கப்படுகிறது.

அவ்வாறாக பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் ப்ளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. அவை மண்ணில் புதைந்து மண்ணின் தரத்தையும் மோசமாக்கும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் ஸ்ட்ராவில் குளிர்பானங்களை அருந்துவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜூஸ் கடைகள், உணவு விடுதிகள், சாலையோர இளநீர் கடைகள் என எங்கும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக மக்கிப் போகும் குணமுள்ள பேப்பர் ஸ்ட்ராக்களையோ அல்லது மறுபயன்பாட்டிற்கு உகந்த சில்வர் ஸ்ட்ராக்களையோ பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தும் கடைகள் மீது கடும் நடவடிக்கை, அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.