ராஜஸ்தானின் நாகூரில் உள்ள நயா தர்வாசா பகுதியில் உள்ள ஒரு இ-மித்ரா மையத்தில், ஜன் ஆதார் திருத்தம் செய்ய வந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் சாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட அந்த இளைஞருக்கு, இ-மித்ரா ஆபரேட்டராக பணியாற்றும் சுரேந்திர சோலங்கி, சரியான நேரத்தில் CPR வழங்கி உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ, மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் சுரேந்திர சோலங்கியை பாராட்டி வருகின்றனர்.
தியாகி மார்க்கெட்டில் வசிக்கும் நர்பத் ராம் என்ற இளைஞர், தனது ஆதார் அட்டையை திருத்த நயா தர்வாசா பகுதியில் உள்ள இ-மித்ரா மையத்திற்கு வந்திருந்தார். பயோமெட்ரிக் இயந்திரத்தில் விரல் வைத்தபோது, திடீரென மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டு சாய்ந்தார். அருகில் இருந்த சுரேந்திர சோலங்கி, சிறிதும் தயக்கமின்றி உடனடியாக CPR கொடுத்து அவரது சுவாசத்தை மீட்டதுடன், பின்னர் சுயநினைவும் திரும்பியது.
உடனடியாக தகவலறிந்து வந்த அவரது குடும்பத்தினர், மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்தனர். தற்போது நர்பத் ராமின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது எனக் கூறப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, நாட்டில் பலர் CPR நடைமுறையைப் பற்றிய விழிப்புணர்வும், பயிற்சியும் இல்லாத காரணத்தால், மாரடைப்பால் ஏற்படும் பல உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியாமல் போகிறது.
பொதுமக்களுக்கிடையே இதுபோன்ற அவசரநிலை சிகிச்சை குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க, அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சுரேந்திர சோலங்கி எடுத்த துணிச்சலான முயற்சி, சமூகத்தில் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துச் காட்டியுள்ளது.