மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிக்கல்வித்துறை ஜூன் 16ம் தேதி தேசிய கல்விக் கொள்கை 2020க்கு இணங்க 'மாநில பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட கட்டமைப்பு 2024' ஐ அமல்படுத்துவதில் ஒரு பகுதியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் இப்போது இந்தி 3ம் மொழியாக கட்டாயமாக பயில வேண்டும்.இந்திக்கு மாற்றாக வேறு எந்த மொழியையும் கற்க விரும்புபவர்கள், ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் குறைந்தபட்சம் 20 மாணவர்கள் என்ற அளவில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அந்த குறிப்பிட்ட மொழிக்கான ஆசிரியர் கிடைக்கப்படுவார் அல்லது அந்த மொழி ஆன்லைனில் கற்பிக்கப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மராத்திய மொழி ஆர்வலர்கள் மகாராஷ்டிரா பாஜக அரசின் சமீபத்திய நடவடிக்கை பள்ளிக் கல்வி அமைச்சர் தாதாஜி பூசேவின் முந்தைய அறிக்கைகளுக்கு முரணானது எனக் கூறுகின்றனர். "பூசே ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக இருக்காது எனக் கூறியிருந்தார். அரசின் உத்தரவு மாணவர்களுக்கு இந்திக்கு பதிலாக வேறு இந்திய மொழியை தேர்வு செய்வதற்கு நிபந்தனை விதிக்கிறது. மாற்று மொழி பாடத்துக்கு ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 20 மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கிறது. அத்தகைய தேவை எழுந்தால், ஆசிரியர் நியமிக்கப்படுவார் அல்லது மொழி ஆன்லைனில் கற்பிக்கப்படும் என உத்தரவு கூறுகிறது." என மராத்தி மொழி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 1ம் வகுப்பிலிருந்து இந்தியை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு மாநில அரசு பரவலான எதிர்ப்பை எதிர்கொண்டது. ஏப்ரல் 22ம் தேதி, அமைச்சர் தாதாஜி பூசே 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி இனி கட்டாயமாக இருக்காது எனக் கூறியுள்ளார். பூனேவில் நடந்த ஒரு நிகழ்வில் அமைச்சர் பூசே பேசும் போது, "மூன்றாம் மொழியாக 1ம் வகுப்பிலிருந்து இந்தியை அறிமுகப்படுத்தும் முடிவு முன்னர் எடுக்கப்பட்டது. இருப்பினும், பல பெற்றோர்கள் அதை 3ம் வகுப்பிலிருந்து அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளனர். மேலும் எந்த முடிவும் எடுக்கும் முன் இந்த பரிந்துரைகளை நாங்கள் பரிசீலிப்போம்." எனக் கூறியுள்ளார். அவர், அந்த சமயம் மூன்று மொழிக் கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் பள்ளிகள் தற்போதைக்கு இரண்டு மொழி முறையை தொடரலாம் எனவும் கூறியிருந்தார்.
மகாராஷ்டிரா மாநில இடைநிலை மற்றும் உயர் இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் வசந்த் கல்பண்டே, ஒரு வகுப்பில் இந்தி அல்லாத மொழியை தேர்வு செய்யும் 20 மாணவர்களை கண்டுபிடிப்பது சாத்தியமில்லை எனக் கூறியுள்ளார். "ஆசிரியரை ஆன்லைனில் கிடைக்கச் செய்வதற்கான வழிமுறையும் இந்தியைத் தவிர வேறு எந்த மொழியையும் தேர்வு செய்வதை ஊக்கப்படுத்தாத முயற்சி ஆகும். மராத்தி மற்றும் இந்தி ஒரே மாதிரியான எழுத்துமுறைகளைக் கொண்டிருந்தாலும், இவ்வளவு சிறு வயதிலான மாணவர்களுக்கு எழுத்து முறைகளுக்கு இடையேயான நுணுக்கங்களையும் வேறுபாடுகளையும் கற்றுக்கொள்வது மிகவும் சிரமமானதாக இருக்கும்," எனக் கூறியுள்ளார்.