திருச்சி அருகே கோர விபத்து... முசிறி ஆர்டிஓ சம்பவ இடத்திலேயே பலியான துயரம்!
Dinamaalai June 19, 2025 08:48 PM

 

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் ஆரமுத தேவசேனா (54). இன்று அலுவல் நிமித்தமாக முசிறியில் இருந்து தனது காரில் தேவசேனா, திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். காரை, திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பிரபாகரன் ஓட்டினார். ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி பகுதியில் கார் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பேருந்துக்கு ஓட்டுநர் பிரபாகரன் வழிவிட்டார்.

அப்போது பக்கவாட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இடதுபுறம் அமர்ந்திருந்த ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் ஓட்டுநர் பிரபாகரன் படுகாயமடைந்தார்.

தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபாகரனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் துவங்கி பெட்டவாய்த்தலை வரை அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக 'பிளாக் ஸ்பாட்' என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிவேகம் மற்றும் அஜாக்கிரதை காரணமாக விபத்துகளும், உயிரிழப்புகளும் இச்சாலையில் தொடர்கதையாக உள்ளன. 

சாலையோரம் பணிகள் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்காத காரணத்தினால் பெண் அரசு உயரதிகாரியின் உயிர் பறிபோகிறது.

மதுரையை பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனாவிற்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் புதுக்கோட்டையில் அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரின் பணிக்காலம் பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்டத்தையே சார்ந்து இருந்தது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நிலமெடுப்பு பிரிவில் ஏற்கனவே பணியாற்றியவர். தற்போது முசிறி ஆர்டிஓவாக பொறுப்பேற்று ஓராண்டுகள் மட்டுமே ஆகின்றன.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.