2400 ரூபாய் கொடுத்தால் ரத்தம் கிடைக்கும்.. அரசு மருத்துவமனை முன் நடக்கும் வியாபாரம்.. அதிர்ச்சி தகவல்..!
Webdunia Tamil June 19, 2025 09:48 PM

மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஹமீதியா மருத்துவமனைக்கு வெளியே, பணம் கொடுத்தால் ரத்தம் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த சட்டவிரோத ரத்த வர்த்தகம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோயாளிகளாக வேடமிட்டு சென்ற தனியார் ஊடகம் ஒன்றின் நபர், ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் மருந்துக் கடைக்காரர்கள் வரை ஒரு சங்கிலித்தொடர் இந்த ரத்த வர்த்தகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 'A+' ரத்தம் வேண்டும்' என்றதும், ஒரு ஆட்டோ ஓட்டுநர், "2,400 ரூபாய்க்கு சீல் செய்யப்பட்ட ரத்தப் பை கிடைக்கும் என்றார். அனீஸ் என்பவர் தான் இந்த மோசடியின் மூளையாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அனீஸின் ஆட்களான அருண் மஹாவர் போன்றவர்கள், முன்பணம் பெற்றுக்கொண்டு, எவ்வித மருத்துவ பரிசோதனையும் இன்றி ரத்தப் பைகளை விநியோகித்துள்ளனர்.

இந்த ரகசிய நடவடிக்கையின் மூலம், ரத்தம் ஒரு வணிக பொருளாக மாறிவிட்டது தெளிவாக தெரிந்தது. தானம் செய்பவரின் சரிபார்ப்போ, மருத்துவ பரிசோதனையோ, பாதுகாப்பு உறுதிப்பாடோ இல்லை. "டாக்டர் கேட்டால் இந்த அறிக்கை சுத்தமானது என கூறுங்கள்" என்று ரத்தம் விநியோகித்தவர் கூறியது, மோசடியின் தீவிரத்தை காட்டியது.

"எல்லா மருத்துவமனைகளுக்கும் எங்களிடமிருந்தே ரத்தம் கிடைக்கிறது" என்று அனீஸின் ஆட்கள் பெருமை பேசியது, இந்த நெட்வொர்க்கின் பரவலான தன்மையை உணர்த்துகிறது. மருத்துவமனைக்குள் நோயாளிகள் பாதுகாப்பு பற்றி பேசும் சுவரொட்டிகள் ஒருபுறம் இருக்க, வெளியே உயிரை பிளாஸ்டிக் பைகளில் விற்கும் இந்த சட்டவிரோதச் செயல், மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.