டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியான சூழல் வருவதற்கு இன்னும் வெகுகாலம் ஆகாது. உறுதியானவர்களால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும்.
நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் நகைகள் என்று நம்புகிறேன். நமது மொழிகள் இல்லாமல், நாம் உண்மையிலேயே இந்தியராக இருப்பதில்லை. நமது நாடு, நமது கலாச்சாரம், நமது வரலாறு, நமது மதத்தைப் புரிந்து கொள்ள, எந்த வெளிநாட்டு மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான வெளிநாட்டு மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்ய முடியாது. மீண்டும் ஒருமுறை, சுயமரியாதையுடன், நமது சொந்த மொழிகளில் நமது நாட்டையும், உலகையும் வழிநடத்துவோம்.
அமிர்த காலத்திற்கான 'பஞ்ச் பிரான்' (ஐந்து உறுதிமொழிகள்) அடித்தளத்தை பிரதமர் மோடி அமைத்துள்ளார். 'வளர்ந்த இந்தியாவின் இலக்கை அடைதல், அடிமைத்தனத்தின் ஒவ்வொரு தடயத்தையும் அகற்றுதல், நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்வது, ஒற்றுமைக்கு உறுதியுடன் இருப்பது, ஒவ்வொரு குடிமகனிடமும் கடமை உணர்வைத் தூண்டுதல்' இந்த ஐந்து உறுதிமொழிகளும் 130 கோடி மக்களின் உறுதிமொழியாக மாறியுள்ளன. அதனால்தான் 2047-ம் ஆண்டுக்குள், நாம் உச்சத்தில் இருப்போம் என்ற நம்பிக்கை வளர்ந்திருக்கிறது. மேலும் நமது மொழிகள் இந்தப் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
தற்போதைய நடைமுறைகள் இன்னும் காலனித்துவ கால சிந்தனையை பிரதிபலிக்கின்றன. இலக்கியம் சமூகத்தின் ஆன்மா. நமது நாடு இருள் சூழ்ந்த காலத்தில், இலக்கியம் நமது மதம், சுதந்திரம் மற்றும் கலாச்சாரத்தின் விளக்குகளை ஏற்றி வைத்திருந்தது. அரசாங்கம் மாறியபோதும், யாரும் அதை எதிர்க்கவில்லை. ஆனால் யாராவது நமது மதம், கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தைத் தொட முயற்சிக்கும்போதெல்லாம், நமது சமூகம் அவர்களை எதிர்த்து நின்று அவர்களைத் தோற்கடித்தது. இலக்கியம் நமது சமூகத்தின் ஆன்மா" என்றார்.