KYC சரிபார்ப்பு என்ற பெயரில் இளம்பெண்ணிடம் ₹8.10 லட்சம் மோசடி: எஞ்சினியர் கைது..!
Webdunia Tamil June 19, 2025 09:48 PM

KYC சரிபார்ப்பு என்ற பெயரில் இளம்பெண்ணிடம் ₹8.10 லட்சம் மோசடி செய்ததாக எஞ்சினியர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்தாரா என்ற பகுதியை சேர்ந்த அஜய் குமார் மண்டல் என்ற நபர், டெல்லியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் ₹8.10 லட்சம் மோசடி செய்துள்ளார். இவர் வங்கி அதிகாரி போல நடித்து, KYC சரிபார்ப்பு என்ற பெயரில் அப்பெண்ணை ரிமோட்-அக்செஸ் செயலி ஒன்றை நிறுவ செய்து, அவரது செல்போனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பணத்தைத் திருடியுள்ளார்.

மோசடிப் பணத்தில் அவர் பல ஐபோன்கள் மற்றும் மேக்புக்கை வாங்கியதோடு, டிஜிட்டல் வவுச்சர்கள் மூலம் வாங்கியும், போலி அடையாளங்கள், போலி மொபைல் எண்கள், பல ஐபி முகவரிகளை பயன்படுத்தியும் தன் தடயங்களை அழிக்க முயன்றுள்ளார். இருப்பினும், சைபர் தடயவியல் குழு, ஐபி பதிவுகள், சிம் செயல்பாடு மற்றும் IMEI எண்களை கொண்டு மண்டலை கண்டுபிடித்தது. ஜார்க்கண்டில் உள்ள கிரிடிஹ் பகுதியிலிருந்து ஒரே நேரத்தில் செயல்பட்ட இரண்டு சந்தேகத்திற்கிடமான மொபைல் எண்கள் இந்த வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தின.

சுரங்கப் பொறியியலில் டிப்ளமோ பட்டம் பெற்ற மண்டல், இந்த மோசடியின் முக்கிய சூத்திரதாரர். தொழில்நுட்ப கையாளுதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர். விசாரணைகள் தொடர்வதாகவும், மேலும் பல பொருட்கள் மீட்கப்படும் என்றும், கூடுதல் கைதுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.