சென்னையில் பெரம்பூரில் ஜூன் 18ம் தேதி காலை 7:30 மணிக்கு பயங்கர விபத்து நிகழ்ந்தது. கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியில் வசித்து வரும் 10 வயது பள்ளி மாணவி சௌமியா உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. சௌமியாவை அவரது தாயார் யாமினி இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது பள்ளி அருகே பொதுப்பாதையில் வந்த கனரக லாரி ஒன்று திடீரென மோதியதில் சௌமியா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே சமயம் யாமினி படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயர சம்பவத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உடனடியாக கனரக வாகனங்களுக்கு கடுமையான நேரக் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் வாகனங்கள் மற்றும் இதற்கு அனுமதி அளிக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகனங்களை குறைந்தது 100 நாட்கள் வரை திருப்பி ஒப்படைக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் லாரி இயக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று கொளத்தூர் பகுதி போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்திக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் பிரிவின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது கொளத்தூர் காவல்நிலையத்தில் பாரதிய நியம சட்டம் பிரிவு 105 (கொலைக்கு ஒப்பான கவனக்குறைவு) மற்றும் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல்துறை, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பள்ளி வளாகங்கள் அருகே கூடுதல் காவலர்களை நிறுத்தவும், CCTV கண்காணிப்பை விரிவாக்கவும் முடிவு செய்துள்ளது.