அரசு மற்றும் தனியார் வேலைகளை இடைத்தரகர் மூலம் பெரும் முயற்சியில் அவர்களை நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த மாயாண்டி என்பவரிடம், அவரது மகனுக்கு வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.10 லட்சத்து 87 ஆயிரம் பணத்தினை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 2023-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் சென்று தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி ரெஜின் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் வழக்கின் மற்றொரு குற்றவாளியான உமா என்பவர் புதுடெல்லியில் இருந்து வருவதாக தொழில்நுட்ப உதவியுடன் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் புதுடெல்லி சென்று அங்கு தலைமறைவாக இருந்த குற்றவாளி உமாவை கைது செய்து, இன்று திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, காவலுக்கு உட்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு தலைமறைவாக இருந்து வந்த எதிரியை டெல்லி சென்று கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை, மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். மேலும் அவர் பொதுமக்கள் வெளிநாட்டு வேலை, அரசு மற்றும் தனியார் வேலைகளை இடைத்தரகர் மூலம் பெரும் முயற்சியில் அவர்களை நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.