இஸ்ரேல்- ஈரான் போரின் எதிரொலி: ஹார்மூஸ் நீரிணையை மூட முடிவு: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்..?
Seithipunal Tamil June 23, 2025 08:48 AM

அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது தொடர்ந்து 10-வது நாளாக இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பத்தி தாக்குதல் நடந்து வருவதால், இரு நாடுகளுக்குமிடையில், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து, ஈரானுக்கு ஆதரவாக ஓமனும் யுத்தத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் , மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஹார்முஸ் நீர்முனை பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடாவின் நடுவில் உள்ள பகுதியாகும். பெர்சியன் வளைகுடாவின் ஒரு பகுதியில் ஈரான் உள்ளது. ஒருமுனையில் குவைத் அமைந்துள்ளது. உலக நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகம் பெர்சியன் அல்லது அரேபியன் வளைகுடாவில் ஹார்மூஸ் நீரிணை வழியாகவே நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர் அபாயம் ஏற்பட்ட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.