ஐ.நா அணுசக்தி கண்காணிப்பில் இருந்து இரான் விலகினால் என்ன ஆகும்?
BBC Tamil June 27, 2025 03:48 PM
Getty Images

இரான் நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதன் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களைக் காரணம் காட்டி இந்த முடிவை எடுத்துள்ளது இரான்.

இந்த நடவடிக்கை, சர்வதேச அணுசக்தி முகமையுடனான (IAEA- ஐஏஇஏ) பதற்றங்களை அதிகரிக்கிறது மற்றும் இரானின் அணுசக்தி திட்டத்தை உலகளாவிய முறையில் கண்காணிப்பதில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தக்கூடும்.

புதன்கிழமை (ஜூன் 25) நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், ஐஏஇஏ ஊழியர்களின் ஆய்வுகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அது சார்ந்த அறிக்கைகளை வெளியிடுவது போன்றவற்றை நிறுத்தும்.

இந்த மசோதாவிற்கு, இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், இரானின் அணுசக்தி திட்டம் குறித்த கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இந்த மசோதா குறிக்கிறது.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் செய்தித் தொடர்பாளர் எம்.பி. இப்ராஹிம் ரெசாயின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை இரானின் இறையாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தவும், 'அரசியல்மயமாக்கப்பட்ட ஏஜென்சி' என அவர் அழைக்கும் ஐஏஇஏ-யை எதிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த மசோதா இரானுக்கு ஒரு பேரம் பேசும் கருவியாக செயல்படக்கூடும்.

குறிப்பாக, மேற்குலக நாடுகளுடன் புதுப்பிக்கப்பட்ட ராஜ்ஜீய உறவுகளுக்கான அறிகுறிகள் தென்படுவதாலும், அதிபர் பெசெஷ்கியன் அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இரான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதையும் வைத்துப் பார்க்கும்போது.

இரானின் பதிலடி Getty Images டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் படைகள் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட பல இரானிய அணுசக்தி தளங்களைத் தாக்கி, நடத்திய 12 நாள் வான்வழிப் போரை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இரான், இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க தளத்தின் மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது.

இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்கள் மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை உறுதிமொழிகளுக்கு இரான் இணங்கவில்லை எனக் குற்றம்சாட்டும் சமீபத்திய ஐஏஇஏ தீர்மானம், ஆகிய இரண்டிற்கும் இரானிய நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கை ஒரு அரசியல் பதிலடியாகக் கருதப்படுகிறது.

இந்தத் மசோதா இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு வந்தது. மேலும் இதுவே தாக்குதல்களுக்கு வழிவகுத்ததாக இரானிய உயரதிகாரிகள் நம்புகின்றனர்.

  • இரான், இஸ்ரேலிலிருந்து திரும்பிய தமிழர்கள் சந்தித்த இன்னல்கள்
  • இரான் அமெரிக்காவுடன் மோதினால் செளதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஏன் பகைக்க நேரிடும்?
ஐஏஇஏ இரானில் என்ன செய்கிறது? IRNA/AFP via Getty 2014இல், நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் (இடதுபுறத்திலிருந்து 2வது, 3வது) மற்றும் இரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள்.

இரானின் அணுசக்தி திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணிப்பதில் ஐஏஇஏ முக்கிய பங்கு வகித்து வருகிறது.

2015ஆம் ஆண்டில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய ஆறு உலக வல்லரசுகளின் குழுவுடன், தனது அணுசக்தி திட்டம் குறித்து நீண்டகால ஒப்பந்தத்தை இரான் மேற்கொண்டது.

ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், பொருளாதாரத் தடைகளை திரும்பப்பெறுவதற்கு ஈடாக, செறிவூட்டல் அளவைக் கட்டுப்படுத்தவும், மேம்படுத்தப்பட்ட சர்வதேச ஆய்வுகளை அனுமதிக்கவும் இரான் ஒப்புக்கொண்டது.

2018ஆம் ஆண்டில், டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றி, இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தார். இரான் ஒப்பந்தத்தின் சில பகுதிகளைப் புறக்கணிக்கத் தொடங்கியது.

இரான், யுரேனியத்தை அதிக அளவில் செறிவூட்டத் தொடங்கியது, சர்வதேச ஆய்வாளர்களுக்கான அணுகலை குறைத்தது மற்றும் அணுசக்தி தளங்களில் ஐ.நா.வின் சில கண்காணிப்பு கேமராக்களை முடக்கியது.

இரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT- என்பிடி) தொடர்ந்து இருப்பதால், ஐஏஇஏ அடிப்படை ஆய்வுகளைத் தொடர்ந்தது. இருப்பினும் முன்பு இருந்ததை விட குறைவான வளங்கள் மற்றும் குறைவான தரவுகளுடன்தான் அதைச் செய்ய முடிந்தது.

ஜூன் 2025 மோதலுக்கு முன்பு, ஐஏஇஏ ஆய்வாளர்கள் இரானில் தங்கியிருந்தனர். அவர்கள் கடைசியாக, இரானின் 400 கிலோவிற்கும் அதிகமான யுரேனியம் 60% தூய்மை என்ற அளவு வரை செறிவூட்டப்பட்டதை சரிபார்த்தனர். இது ஆயுத தரத்திற்குக் குறைவான தூய்மை நிலையாகும்.

ஆனால் இது ஆயுத தர தூய்மைக்கு அருகிலான ஒரு நிலையாகவும் மற்றும் எந்தவொரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் தேவையானதை விட மிக அதிகமான தூய்மை அளவாகவும் கருதப்படுகிறது.

  • '20 லட்சம் பீப்பாய்கள்' - இரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியாவில் என்ன நடக்கும்?
  • அரபு போரில் இஸ்ரேல் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானி
AFP இரானின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து விவாதிக்க ஐஏஇஏ இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி (இடதுபுறத்திலிருந்து இரண்டாவது) வியன்னாவில் ஆஸ்திரிய அதிபரைச் சந்தித்தார்.

முக்கிய அணுசக்தி நிலையங்களுக்கான அணுகலை மறுப்பது, அறிவிக்கப்படாத தளங்களில் யுரேனியம் தடயங்கள் கண்டறியப்பட்டது குறித்து விளக்கத் தவறியது, ஐஏஇஏ கண்காணிப்பைக் குறைத்தது, ஆகியவற்றின் மூலம் இரான் அதன் 'என்பிடி' கடமைகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம் சாட்டி ஜூன் 12 அன்று, ஐஏஇஏ-இன் ஆளுநர்கள் குழு, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஐஏஇஏ குழுவில் உள்ள 35 நாடுகளில் பத்தொன்பது நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்பட) இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அதே சமயம், ரஷ்யா, சீனா மற்றும் புர்கினா ஃபாசோ என மூன்று நாடுகள் அதை எதிர்த்தன.

இந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று இரான் கண்டனம் தெரிவித்தது. ஒருநாள் கழித்து, பல இரானிய அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கின.

ஐஏஇஏ இரானுக்கு பாரபட்சம் காட்டுகிறதா? Anadolu/AFP via Getty Images மார்ச் 2022இல் சபோரிஷியா அணுமின் நிலையத்தில் நடந்த சண்டையின் போது தீ விபத்து ஏற்பட்டது.

ஐஏஇஏ மீதான இரானின் விரக்தி என்பது, தாங்கள் சமமற்ற முறையில் நடத்தப்படுவதாக அந்நாடு கருதுவதால் ஏற்படுகிறது.

ரஷ்யப் படைகள் 2022ஆம் ஆண்டில் யுக்ரேனின் சபோரிஷியா அணுமின் நிலையத்தை ஆக்கிரமித்தபோது, ஐஏஇஏ இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோசி, அவசர எச்சரிக்கைகளை வெளியிட்டு, "ரஷ்யா நெருப்புடன் விளையாடுவதாக" குற்றம் சாட்டினார்.

இதற்கு நேர்மாறாக, இரானிய அணுசக்தி உள்கட்டமைப்பு மீதான சமீபத்திய தாக்குதல்களின் போது, இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் பெயர்களை பயன்படுத்துவதை க்ரோசி தவிர்த்தார். அணுசக்தி தளங்களுக்கு அருகிலான எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக பொதுவான எச்சரிக்கைகளை அவர் வெளியிட்டார்.

இந்த வார தொடக்கத்தில் சிஎன்என் உடனான ஒரு நேர்காணலில் க்ரோசி தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, "எனது வேலை பழி சுமத்துவது அல்ல, ஆனால் பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவதும், விபத்துகளைத் தடுப்பதும்தான். எந்தவொரு அணுசக்தி தளத்தையும், எந்தத் தரப்பினரும் குறிவைக்கக்கூடாது என்று நான் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன்" என்று கூறினார்.

இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, க்ரோசி பேச்சுவார்த்தைகளை முன்மொழிந்தார்.

"ஐஏஇஏ உடனான ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குவது என்பது வெற்றிகரமான ராஜ்ஜீய தொடர்புகள் குறித்த ஒப்பந்தத்திற்கு முக்கியமாகும்" என்று க்ரோசி ஒரு எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்தார் .

"கூடிய விரைவில், வெளியுறவு அமைச்சர் அரக்சியைச் சந்திக்க விரும்புகிறேன்."

மோதலின் போது ஆய்வாளர்கள் இரானில் இருந்தனர், ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆய்வுப் பணிகளை நிறுத்தி வைத்தனர். இப்போது தளங்களுக்குத் திரும்பத் தயாராக உள்ளனர் என்று ஐஏஇஏ தெரிவித்துள்ளது.

  • அபிநந்தனை சிறை பிடித்த பாகிஸ்தான் ராணுவ மேஜர் மரணம் - என்ன நடந்தது?
  • ஆக்ஸியம் 4: அல்வா, அன்னப் பறவை பொம்மையை விண்வெளிக்கு எடுத்துச் செல்வது ஏன்?
இரானில் மீண்டும் ஐஏஇஏ? AFP இரானிய அணுசக்தி நிலையங்களுக்குள் தனது ஆய்வாளர்களை மீண்டும் அனுப்ப ஐஏஇஏ தீவிரமாக விரும்புகிறது. (படத்தில் இஸ்ஃபஹான் அணுசக்தி நிலையம்)

புதன்கிழமை ஆஸ்திரியாவில் பேசிய க்ரோஸி, "இரானின் அணுசக்தி நிலையங்களுக்கு - குறிப்பாக ஜூன் 13 அன்று தாக்கப்பட்ட மூன்று செறிவூட்டல் நிலையங்களுக்கு, ஐஏஇஏ ஆய்வாளர்களை மீண்டும் அனுப்பி சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும், இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகளின் நிலையை சரிபார்ப்பதற்கும்தான் முன்னுரிமை அளிக்கப்போவதாகத்" தெரிவித்தார்.

குறிப்பாகக் இரானின் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் பற்றி கேட்டபோது, ஜூன் 13 அன்று இரான் தனக்கு ஒரு கடிதம் அனுப்பியதாகவும், அணுசக்தி பொருட்கள் மற்றும் உபகரணங்களைப் பாதுகாக்க "சிறப்பு நடவடிக்கைகள்" எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டதாகவும் க்ரோஸி கூறினார்.

இருப்பினும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட விவரங்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.

"அவர்கள் விரிவாகக் கூறவில்லை என்றாலும், இதுதான் மறைமுகமான நோக்கம் என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பொருள் அங்கே இருப்பதாக நாம் கருதலாம்" என்று அவர் கூறினார். இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு, தாக்குதல்களில் இருந்து தப்பியிருக்கலாம் என்று பரிந்துரைத்தார்.

ஐஏஇஏ ஆளுநர்கள் வாரியத்திற்கு க்ரோஸி அளித்த ஒரு விளக்கத்தில், 'ஃபோர்டோ மற்றும் நடான்ஸில் குறைந்த அளவிலான கதிரியக்க மற்றும் வேதியியல் உமிழ்வை உறுதிப்படுத்தினார், ஆனால் தள எல்லைகளுக்கு அப்பால் எந்த கதிர்வீச்சும் கண்டறியப்படவில்லை' என்று தெரிவித்தார்.

"கடுமையான கதிரியக்க விளைவுகளின் ஆபத்து காரணமாக அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் தாக்கப்படக்கூடாது" என்று க்ரோஸி எச்சரித்தார்.

இரான், ஐஏஇஏ உடனான தனது ஒத்துழைப்பை நிறுத்தினால், உலகின் மிக முக்கியமான அணுசக்தி திட்டங்களில் ஒன்றிற்கான நிகழ்நேர அணுகலை சர்வதேச சமூகம் இழக்க நேரிடும்.

மேற்கத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, 2003ஆம் ஆண்டு வட கொரியா ஐஏஇஏ-வை விட்டு வெளியேறியதற்கு பிறகு, ஐ.நா. அணுசக்தி மேற்பார்வையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாகும்.

இப்போது இதன் எதிர்காலம் என்பது இரண்டு முக்கிய முடிவுகளைப் பொறுத்தது- இரானிய அதிகாரிகள் சட்டத்தை அமல்படுத்துகிறார்களா மற்றும் கண்காணிப்பு அமைப்பு முற்றிலுமாக சரிவதற்கு முன்பு க்ரோஸியின் முயற்சிகள் மூலம் ராஜ்ஜீய ரீதியிலான நம்பிக்கையை மீட்டெடுக்க முடியுமா?

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.