ஹரியானாவின் பரிதாபாத் நகரத்தில் நிகழ்ந்த ஒரு கண்ணீர் கிளப்பும் கொடூர சம்பவம், விலங்கு நேசிகள் மட்டுமல்லாமல், சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது QRG மருத்துவமனை அருகே, ஒரு பெண் தனது செல்ல நாயை காரிலிருந்து இறக்கி, அதனை நடுப்பாதையில் கைவிட்டு, தன்னுடைய கருப்பு சாம்பல் நிற டிசைர் கார் (HR51 CF 2308)-யில் வேகமாக செல்லும் காட்சி, சமூக பயனரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
அந்த வீடியோவில், பாவப்பட்ட நாய் தனது உரிமையாளரை 2 கி.மீ வரை துரத்தி ஓடுவதும், கத்துவதும், ஆனால் அந்த கார் நிற்காமல் செல்வதும் தெளிவாக காணப்படுகிறது.
வீடியோவில் பதிவுசெய்த பெண் உருக்கமாக, “இந்த நாய்க்கு என்ன தெரியும்… தன் அம்மா போறாளு, அது தானும் போகணும் என்று தான் நினைக்குது… ஆனா அவ நம்பிக்கையை சிதைச்சுட்டாங்க” எனக் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி, பொதுமக்களிடையே கடும் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விலங்கு நேசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இந்த சம்பவத்தை மனிதநேயம் இல்லாத, மிருகத்தன்மையிலும் கீழான செயல் என வர்ணித்து, உரிமையாளருக்கு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணையவாசிகள் பலரும் தங்களது கோபத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருவர் “இது நாயா இல்ல குழந்தையா… இது abandonment இல்ல, outright cruelty” எனவும், மற்றொருவர் “மனித நாகரிகம் இந்த அளவுக்கு இறங்கிவிட்டதா?” எனவும் பதிவிட்டுள்ளனர்.
“இப்படி செய்கிறவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். நாய்கள் உணர்வுள்ள உயிர்கள், பொம்மைகள் அல்ல” எனக் கருத்து தெரிவித்துள்ளனர். நாயை இப்படியொரு இடத்தில் விட்டு விட்டதனால், அது மற்ற வாகனங்களால் மோதப்படுவதோ, தெரு நாய்களால் தாக்கப்படுவதோ என பல அபாயங்களுக்கு உள்ளாகும் அபத்த நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக உரிமையாளரை அடையாளம் காண சமூக வலைதளங்கள் முழுவதும் மக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வாகன எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அந்த நபர் யாரென கண்டறிய முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்த நபர் தொடர்பான தகவல் உள்ளவர்கள், அருகிலுள்ள விலங்கு நல அமைப்புகள் அல்லது காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு பொதுமக்கள் மற்றும் விலங்கு நேசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த மாதிரியான செயலை மீண்டும் யாரும் செய்யாத வகையில், தடியாக ஒரு தண்டனைச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் சமூகத்திலிருந்து எழுந்துள்ளது.