அயர்லாந்தின் ஆஃபாலி கவுண்டியைச் சேர்ந்த ஜோசப் க்ரோகன் (வயது 75) என்ற பணக்கார நில உரிமையாளர், பல ஆண்டுகளாக இரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது வீட்டில் பணியாளராக இருந்த லிசா ஃபிளாஹெர்டி (வயது 50) என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்ததிலிருந்து 24 மணி நேரத்துக்குள், ஜோசப் மரணமடைந்தார்.
அவரது மரணத்துக்குப் பிறகு, ஜோசப்பின் சொத்துகள் – 5.5 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47 கோடி) மதிப்புள்ள நிலங்கள் மற்றும் சொத்து – அவரது புதிய மனைவி லிசாவுக்குச் சொந்தமானது.
இதனை எதிர்த்து, ஜோசப்பின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். “இந்த திருமணம் மற்றும் மரணம் பற்றிய எந்த தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. லிசா எங்களை ஏமாற்றி திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்” என அவர்கள் குற்றம் சாட்டினர்.
குடும்பத்தினர் லிசாவை, பணத்துக்காக நெருக்கம் ஏற்படுத்திய சூழ்ச்சிகாரியாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால், லிசாவின் நெருங்கிய நண்பர்கள் கூறுவது வேறுபட்டது. “இவர்களுக்கிடையே 1991ஆம் ஆண்டு முதல் நெருக்கமான உறவு இருந்து வருகிறது. லிசா சிறுவயதிலேயே (16 வயதில்) ஜோசப்புடன் பழகினார்.
மேலும், அவர் லிசாவின் வாழ்க்கையில் முக்கியமான ஆதரவாளராக இருந்தார். லிசாவின் மூன்று குழந்தைகளுக்கும் அவர் தந்தைபோல் இருந்தார்” என நண்பர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதேவேளை, ஜோசப்பின் மரணம், புற்றுநோய் மற்றும் அதற்கான சிகிச்சையால் ஏற்பட்ட தொற்று காரணமாகவே ஏற்பட்டது என்று மருத்துவ தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதனிடையே, லிசாவுக்கு ஜோசப்பின் சொத்துகளின் முழுமையான உரிமை கிடைக்கும் என அவரது வக்கீல்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வழக்கை உலக அளவில் பலரும் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.