மதுரை மாநகராட்சியில் சுமார் ரூ.200 கோடி மோசடி நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த மோசடி குறித்த விசாரணை தொடங்கியது. மாநகராட்சி அதிகாரிகளின் கடவுச்சொற்களை பயன்படுத்தி சொத்து வரி குறைத்து மதிப்பிடப்பட்டதாகவும், இதனால் ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் உட்பட ஏற்கனவே எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் மேயரின் கணவர் பொன் வசந்த் மற்றும் சில தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சென்னையில் இருந்த பொன் வசந்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பொன் வசந்த், விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva