மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் அதாவது தமிழில் ஆவணி மாதம் தொடங்கியதை முன்னிட்டு, கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர். புத்தாண்டு பிறப்பை வரவேற்கும் வகையில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சிங்கம் மாதம், மலையாளிகளுக்கு ஒரு புதிய தொடக்கமாக கருதப்படுகிறது. இந்த மாதம் செழிப்பு, அறுவடை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, சிங்கம் மாதத்தில்தான் கேரளாவின் மிக முக்கியமான அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சிங்கம் மாதத்தின் முதல் நாளில் பத்மநாப சுவாமி கோயிலுக்கு வருவது மிகவும் புண்ணியமான செயலாக கருதப்படுகிறது. கேரளா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டனர்.
கோயில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் இந்த நாளில் நடைபெற்றன. மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, புத்தாண்டுக்கான நல்லெண்ணங்களை வெளிப்படுத்தி, சுவாமியின் அருளைப் பெற்றனர்.
Edited by Siva