நமது அண்டைய நாடான பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக, அந்நாட்டின் கைபர் பக்துவா, சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. பல பகுதிகளில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்து வருகின்றது.
இந்த கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 750 பேர் உரிழந்துள்ளனர். மேலும், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வாறு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.