டெல்லி-என்சிஆர் பகுதியில் தெருநாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தனது முந்தைய உத்தரவை மாற்றி அமைத்து, கருத்தடை செய்யப்பட்ட தெருநாய்களை மீண்டும் தெருக்களில் விடுவிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிக்கக்கூடாது என்றும், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மாநகராட்சிகள் ஒவ்வொரு வார்டிலும் நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை உருவாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து முக்கிய உத்தரவுகள்:
1. உணவளிக்கும் பகுதிகள்: மாநகராட்சிகள் தங்கள் வார்டுகளில் நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை உருவாக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க அனுமதி இல்லை. இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. அகில இந்திய உத்தரவு: உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை டெல்லி-என்சிஆர் பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், அகில இந்தியா முழுவதற்கும் விரிவுபடுத்தி, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
3. முந்தைய உத்தரவில் மாற்றம்: ஆகஸ்ட் 8 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு மாறாக, இந்த முறை, தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் செய்யப்பட்ட நாய்களை அதே பகுதியில் மீண்டும் விடுவிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், வெறிநாய் நோய் அல்லது ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களுக்கு நோய் தடுப்பு மருந்து கொடுத்து, அவற்றை தனி காப்பகங்களில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4. நாய்களை விடுவிப்பதற்கான தடை நீக்கம்: "தெருநாய்களை விடுவிப்பதற்கான தடை நீக்கப்படுகிறது. அவை குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் அதே பகுதியில் அனுப்பப்பட வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
5. தத்தெடுக்கும் பொறுப்பு: விலங்கு நல ஆர்வலர்கள் நாய்களை தத்தெடுக்க விண்ணப்பிக்கலாம். ஆனால், தத்தெடுத்த பிறகு அந்த நாய்களை மீண்டும் தெருக்களில் விடமாட்டார்கள் என்பதை உறுதிசெய்வது அவர்களின் பொறுப்பாகும்
இந்த ஐந்து முக்கிய அறிவுறுத்தல்களை உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
Edited by Siva